முகப்பரு 
அழகு / ஃபேஷன்

முகப்பரு கட்டிகளை உடைக்கிறீங்களா? போச்சு! 

கிரி கணபதி

முகப்பரு என்பது பருவமடையும் போது பல ஆண், பெண் என அனைவருக்கும் உண்டாகும் ஒரு பொதுவான சருமப் பிரச்சனையாகும்.‌ இது முகத்தில் மட்டுமல்லாமல் முதுகு, மார்பு போன்ற பகுதிகளிலும் ஏற்படலாம். முகப்பரு கட்டிகள் தோன்றும்போது அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். எனவே, அந்த கட்டிகளை கையாலேயே கிள்ளி உடைப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்வது தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும். நீண்ட கால அடிப்படையில் பல்வேறு விதமான தீவிரமான சரும பிரச்சனைகளுக்கு இது வழி வகுக்கலாம். இந்தப் பதிவில் முகப்பரு கட்டிகளை உடைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி விரிவாகக் காண்போம். 

முகப்பரு கட்டிகளை உடைக்கும் போது பாக்டீரியாக்கள் சருமத்தின் ஆழமான பகுதிகளுக்குப் பரவி மேலும் பல முகப்பருக்களை உண்டாக்கும். இதனால், முகப்பரு தொற்று அதிகரித்து, நீண்ட நாள் குணப்படுத்த முடியாத முகப்பருவாக மாற வாய்ப்புள்ளது. மேலும், அந்தக் கட்டிகளை உடைக்கும்போது ஏற்படும் காயங்கள் தழும்புகளை உண்டாக்கி முக அழகை பாதிக்கும். 

முகப்பருக்களை தொடும்போது கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் அதில் பரவும் வாய்ப்புள்ளது. இது முகப்பருக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும். நகங்களைப் பயன்படுத்தி சருமத்தை கீறும்போது தொற்று தீவிரமடைந்து பிரச்சனையை மோசமாக்கும். முகப்பருக்களில் உள்ள அழுக்குகள் சருமத்தின் நுண்துளைகளை அடைத்து பல முகப்பருக்களை உண்டாக்கும். இதனால், சருமம் தன் இயற்கையான பொலிவை இழக்கும். இதனால் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகள் அடைபட்டு, கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை சருமத்தில் ஏற்படலாம்.

முகப்பரு கட்டிகளை உடைக்கும் போது சருமத்தின் பாதுகாப்பு அடுக்கு சேதமாகி சருமத்தை வறண்டு போகச் செய்கிறது. இதனால் சருமம் சென்சிடிவ் மிக்கதாக மாறி எரிச்சல், சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.‌ சில சமயங்களில் முகப்பரு கட்டிகளில் உள்ள பாக்டீரியாக்கள் கண், வாய் போன்ற உறுப்புகளுக்கும் பரவி தொற்று ஏற்படுத்தலாம். 

சிலருக்கு முகப்பரு கட்டிகளை உடைப்பது மன அழுத்தம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு போன்ற உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. எனவே, முகப்பரு கட்டிகளை உடைப்பது உங்களுக்கு முழுமையான தீர்வை தராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு முகப்பருக்கள் அதிகமாக இருக்கிறது என்றால் ஒரு சரும நிபுணரை அணுகி சரியான சிகிச்சை எடுப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் முகப்பரு பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம். 

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், தூக்கம் மற்றும் தினமும் முகத்தை சுத்தம் செய்வது போன்ற பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் முகப்பருக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 

சிறப்பு சிறுகதை: ரமணி தாத்தாவும், நவராத்திரியும்!

உங்கள் சமயலறையில் அடிக்கடி மாற்றப்பட வேண்டிய 6 அத்தியாவசிய பொருள்கள்...

அனைவரையும் ஊக்குவிக்கும் உலகின் சிறந்த கதைகள்!

நவராத்திரி ஏன் பெண்களுக்கு உகந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?

வெற்றிக்கு வித்திடும் நவராத்திரி!

SCROLL FOR NEXT