கரூர் மாவட்டத்தில் இயங்கும் 300-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் கரூரில் நிலவும் அதிகப்படியான வெப்ப நிலைக்கும் மற்றும் சுகாதார சீர்கேட்டிற்கும் முக்கிய காரணமாக இருப்பதாக பள்ளி மாணவிகள் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரை பரபரப்பு ஏற்படுத்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 31 வது மாநாடு திருச்சி மாவட்டம் துறையூர் நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்றது. இதில் கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் ரேதினா மற்றும் மீனாட்சி ஆகியோர் கரூரில் கல்குவாரிகளால் ஏற்படும் பிரச்சனைகளை ஆய்வு செய்து கட்டுரையாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, கரூரில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்து கிராவல் கற்கள், சுண்ணாம்பு கற்கள், பல வண்ண கற்கள், ஜல்லிக்கற்கள், பெல்ஸ்பார் கற்கள், சாதாரண கற் ஆகிய பல்வேறு கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதனால் காலநிலை மாற்றத்தின் தாக்கம் கரூரை எளிதில் பாதித்திருக்கிறது. இதன் காரணமாக கரூரில் 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயர்ந்து இருக்கிறது.
மேலும் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. நீர் மாசுபாடு ஏற்பட்டு இருக்கிறது. காடுகள் பரப்பளவு குறைந்து இருக்கிறது. சுவாச பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. காற்று மாசுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிகள் மூலமாக அதிக அளவிலான சத்தம் மற்றும் அதிர்வுகள் காரணமாக குழந்தைகள், நோயாளிகள், விலங்குகள், பறவைகள், பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளின் வாழ்நாள் காலம் குறைந்திருக்கிறது.
இவ்வாறு கரூர் மாவட்டத்தில் அதிகரித்துள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் கல்குவாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் சமர்ப்பித்த இந்த ஆய்வு கட்டுரை மாநில அளவில் சிறந்த ஆய்வு கட்டுரைக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.