பாக்கு மரம் 
பசுமை / சுற்றுச்சூழல்

கமுக மரத்தின் சிறப்புகளும் பயன்களும்!

கலைமதி சிவகுரு

முக மரத்தில் மங்களா, சுபமங்களா, மோஹித்‚ சும்ருதி , குட்டை ரகம், தீர்த்தஹல்லி போன்ற ரகங்கள் உள்ளன. இதன் சங்க இலக்கியப் பெயர் கமுகு. உலக வழக்குப் பெயர் பாக்கு. இம்மரத்தின் தாவர இயல்பு 500 முதல் 3000 அடி உயரமான இடங்களில் வளரும் வழவழப்பான மரம்; ஓர் அடி அகலமாக மெலிந்து, மிக ஓங்கி, 100 அடி உயரம் வரை வளரும் அழகிய மரம். ஆண்டு வளர்ச்சி காட்டும் வளையம் மரத்தில் காணப்படும். மரத்தின் நுனியில் முடி போன்று பசிய பல இலைகள் விரிந்து, பாளை விட்டுக் குலைகளுடன் இருக்கும். இதன் மஞ்சரி இலைகள் விழுந்த இலைக் கணுவில் ‘ஸ்பாடிக்ஸ்’ என்ற பூங்குலை, பாளையுள் உண்டாகும்; பாளை பிளந்து குலை விரியும் போது, முதிர்ந்த பாளை கீழே விழுந்து விடும்.

இதன் இலை 4 முதல் 6 அடி நீண்டதாக இருக்கும். சிற்றிலைப் பிரிவுகள் சிறகு போன்றிருக்கும். இலையின் அடி அகன்று ‘ஷீத்திங் பேஸ்’ எனப்படும். இம்மரத்தில் ஆண் மலர்களும், பெண் மலர்களும் தனியாக உண்டாகும். ஆண் மலர்கள் மஞ்சரிக் குலையின் கிளைகளான வலிய நரம்புகளின் மேலே அமர்ந்திருக்கும்; பெண் பூக்கள் இந்நரம்புகளின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆண் பூக்களை விட, இவை சற்றுப் பெரியனவாக இருக்கும்.புல்லி, அல்லி வட்டங்கள் இணைந்து ‘பீரியாந்த்’ எனப்படும். மகரந்த வட்டம் 3 தாதிழைகள் கொண்டிருக்கும். சூலக வட்டமானது பெண் மலரில் உருண்டை வடிவான 1 செல் சூலகம்; ஒரு சூல் முதிரும். இம்மரத்தின் கனி சற்று நீண்ட முட்டை வடிவிலானது; மஞ்சள் நிறமானது; புறவுறை நார் உடையது; விதையின் அடிப்புறம் சற்று அகன்றது; விதைக் கரு அடிப்புறத்தில் இருக்கும்.

பாக்கு மரத்தின் பயன்கள்: துவர்ப்பு சுவை அதிகம் கொண்டுள்ள பாக்கில் டேனின் என்ற மூலப்பொருள் உள்ளது. மேலும், புரோசைனிடின் என்ற வேதிப்பொருளும் உள்ளன. இவை தனித்த அயனிகளை அழிக்கும் செயலை புரிகின்றன. குறிப்பாக, ஞாபக மறதி மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் மூளை நரம்புச் சிதைவு வேதிம நச்சுக் காரணிகளை சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கின்றது.

பாக்கின் மூலப்பொருட்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் சரும சுருக்கத்தைப் போக்க அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. குருத்து இலையை இடித்துச் சாறெடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவைத்து இளஞ் சூட்டில் இடுப்பில் தடவி வர இடுப்புவலி நீங்கும்.

குடற்பகுதியில் மிகுந்த கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் உறிஞ்சுதலை வெகுவாகத் தடுக்கின்றது. பாக்கு மரத்தின் வேரால் பல்லசைவும், வாய்ரணமும் அதன் இளம்குருத்தால் இடுப்புவலியும் நீங்கும். இதன் வேரைப் பஞ்சுபோல் இடித்து ஒரு குடுவையில் எட்டு மடங்கு நீர் விட்டு நான்கிலொன்றாகக் காய்ச்சி வடிகட்டி, அடிக்கடி வாயிலிட்டுக் கொப்புளித்துவர, வாய் ரணமும், பல்லசைவும் போகும்.

இதன் கியாழத்தை (காய்ச்சி வடிகட்டிய நீரை) ஆறாத கட்டுப் புண்களுக்கு விட்டு அலம்பி வர விரைவில் ஆறும். இந்த மரத்தின் கொட்டையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாக்கு, பாக்குப்பொடி மற்றும் சீவல் போன்றவை வெற்றிலை, சுண்ணாம்போடு சேர்த்து தாம்பூலம் தரிக்கப் பயனாகிறது.

மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிலை சாப்பிடும்போது முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மென்றால் மகாவிஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT