Masala poori and Sweet potato cutlet recipes Image Credits: Pinterest
உணவு / சமையல்

சுவையான ரோட்டுக்கடை மசாலா பூரி- சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட் செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

வீட்டில் செய்யும் உணவுகள் சுவையும், ஆரோக்கியமும் மிகுந்ததாக இருந்தாலும் சில உணவுகளை வெளியில் வாங்கி சாப்பிடும்போது அதன் சுவை அலாதியாக இருக்கும். அப்படித்தான் இந்த ரோட்டுக்கடை மசாலா பூரியின் சுவையும் நம்மை நாவூரச் செய்யும். அத்தகைய பிரபலமான உணவு வகையை வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ரோட்டுக்கடை மசாலா பூரி செய்ய தேவையான பொருட்கள்;

பட்டாணி-1 கப்.

உருளை-1

வெங்காயம்-2

தக்காளி-2

சீரகம்-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

பட்டை-1

ஏலக்காய்-1

கிராம்பு-1

கொத்தமல்லி-சிறிதளவு.

புதினா- சிறிதளவு.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

பூரி- தேவையான அளவு.

கார்ன்- சிறிதளவு.

துருவிய கேரட்-சிறிதளவு.

பொடியாக நறுக்கிய வெங்காயம்- சிறிதளவு.

ரோட்டுக்கடை மசாலா பூரி செய்முறை விளக்கம்;

முதலில் ஊறவைத்த பட்டாணி 1 கப், நறுக்கிய உருளை 1 ஆகியவற்றை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக 3 விசில் வரை விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது மசாலாவிற்கு நறுக்கிய வெங்காயம் 2, நறுக்கிய தக்காளி 2, கொத்தமல்லி சிறிதளவு, புதினா சிறிதளவு, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

இப்போது வெந்த பட்டாணி, உருளையை நன்றாக மசித்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை 1, கிராம்பு 1, ஏலக்காய் 1 சேர்த்து கொள்ளவும். அத்துடன் அரைத்து வைத்த வெங்காயத்தை சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கொள்ளவும். நன்றாக கொதிக்க ஆரமித்ததும் கரம் மசாலா 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மசித்து வைத்த பட்டாணி, உருளையை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான் மசாலா தயார். இப்போது ஒரு தட்டில் பூரியை உடைத்து எடுத்து கொண்டு அதன் மீது மசாலாவை ஊற்றி அதன் மீது கார்னை தூவிவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவி வைத்த கேரட்டை போட்டால் சுவையான ரோட்டுக்கடை மசாலா பூரி தயார். நீங்களும் வீட்டில் ஆரோக்கியமாக இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்;

சக்கரைவள்ளி கிழங்கு-2

கேரட்-2

வெங்காயம்-1

உப்பு- சிறிதளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.

மைதா மாவு-2 தேக்கரண்டி.

சோளமாவு-2 தேக்கரண்டி.

பிரெட் க்ரம்ஸ்- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட் செய்முறை விளக்கம்;

முதலில் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை 2 எடுத்து மசித்து கொள்ளவும். அத்துடன் துருவிய கேரட் 2, பெரிய வெங்காயம் 1, உப்பு சிறிதளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா ½ தேக்கரண்டி, மைதா மாவு 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இப்போது அதை கட்லட் வடிவத்தில் தட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலக்கி வைத்து கொள்ளவும். இப்போது சோளமாவு கரைத்து வைத்ததில் கட்லெட்டை முக்கி பிரெட் க்ராம்ஸ்ஸில் பிரட்டி ஒரு தவாவில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து அதில் கட்லெட்டை பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட் தயார். இதை சாஸ்ஸூடன் சேர்த்து சாப்பிடலாம் நன்றாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT