மைதா டைமண்ட்:
தேவையான பொருட்கள்:
மைதா மாவு -ஒரு கப்
பொடித்த ஜீனி -அரைக்கப்
நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மைதாமாவுடன் சீனி, நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு மாவை சற்று கனமாக விரித்து டைமண்ட் வடிவில் கத்தியினால் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். டப்பாக்களில் அடைத்து வைத்தால் சாப்பிட ருசியாக இருக்கும்.
முந்திரிப்பருப்பு பக்கோடா:
செய்ய தேவையான பொருட்கள்:
இரண்டாக ஒடித்த முந்திரி பருப்பு- ஒரு கப்
கடலை மாவு -ஒரு கப்
அரிசி மாவு -கால் கப்
பெரிய வெங்காயம் நறுக்கியது- ஒன்று
பச்சை மிளகாய் கீறியது- 5
கறிவேப்பிலை உருவியது-3 கொத்து
இஞ்சி நறுக்கியது -ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு -தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி மாவு மற்றும் கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் போட்டு உப்பு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசறி தேவையான அளவு தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்திற்கு மாவை நன்றாக பிசறி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்றாக காயவிட்டு, மேலே கொடுத்துள்ள மாவை சிறுசிறு பக்கோடாக்களாக போட்டு நன்றாக வேகவிட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுத்து வைக்கவும். மாலை வேளையில் டீ(வி)யுடன் சாப்பிடலாம்.
பணிவரகு ஆப்பம்
கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்தது என்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதி தன்மைக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆதலால் பணி வரகை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்வது நல்லது.
பணி வரகு ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
பணி வரவு அரிசி -இரண்டு கப்
பச்சரிசி, புழுங்கல் அரிசி தலா- அரைக்கப்
உளுந்து- 5 டேபிள் ஸ்பூன்
வெந்தயம்- ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
தேங்காய்ப்பால் - 1 பெரிய கப்
துருவிய வெல்லம்- அரை கப்
ஏலப்பொடி -இரண்டு சிட்டிகை
செய்முறை:
பணி வரகு அரிசி மற்றும் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக நன்கு ஊறவைத்து, பின்னர் களைந்து நீரை வடித்துவிட்டு மை போல் அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கரைத்து நன்றாக புளிக்க விடவும். மறுநாள் இந்த மாவில் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து தோசைமாவை விட சற்று நீர்க்க கரைக்கவும். ஆப்பச் சட்டியை சூடுபடுத்தி அதில் எண்ணெய் தேய்த்து நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி நன்றாக சுழற்றவும். மூடிபோட்டு வேகவைத்து ஜல்லி கரண்டியால் உடைந்து விடாமல் எடுத்து வைக்கவும்.
தேங்காய் பாலில் துருவிய வெல்லப்பொடி மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும். சாப்பிடும்பொழுது இந்தப் பாலை ஆப்பத்தில் ஊற்றி சாப்பிடவும்.