8 Psychological Facts About Close Friends
8 Psychological Facts About Close Friends https://sgnanasambandan.blogspot.com/
வீடு / குடும்பம்

நெருக்கமான நண்பர்கள் குறித்த 8 உளவியல் உண்மைகள்!

பாரதி

நாம் நம்முடைய பல ரகசியங்களை, அம்மா, அப்பாவிடம்கூட சொல்லாத பல விஷயங்களை நமது நண்பர்களிடம்தான் சொல்வோம். ஏனெனில், நம்முடைய பேச்சை பொறுமையாகக் கேட்பவர் அவர்தான். குறை கூறாமல் என்ன செய்யலாம் என்று வழி கூறுபவரும் அவர்தான்; சிரிப்பிலும் அழுகையிலும் நம்முடன் இருப்பவரும் அவர்தான். நம்மைவிட்டு யார் சென்றாலும், நண்பன் என்ற அந்த ஓர் உறவு மட்டும் எப்போதும் நம்முடன் இருக்கும்.

நம்முடன் பழகும் அனைவரையும் முதலில் நாம் நண்பர்களாகத்தான் பார்ப்போம். பார்ப்பவர்கள் அனைவரும் எப்படி நண்பர்கள் ஆகிவிட முடியும்? அப்படியே நண்பர்கள் ஆனாலும், நம் வாழ்க்கை முழுதும் அவர் நண்பராகவே பயணிப்பாரா?

வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய நண்பர்கள் யாரென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் இந்த உளவியல் உண்மைகளைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

1. உங்களுடைய எந்த நண்பருடன் நீங்கள் ஏழு வருடங்களாக அதே பிணைப்புடன் இருக்கிறீர்களோ, அவரே வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய நண்பர். அந்த ஏழு வருடங்களில் எத்தனையோ பிரச்னைகள் இருவருக்குள்ளும் வந்திருக்கும். மூன்றாவது மனிதர் வந்து உங்கள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுத்தியிருக்கலாம். வேறு வேறு கல்லூரிகளுக்கு சென்றிருக்கலாம் அல்லது வேறு பல சூழ்நிலைகள் காரணமாக பிரச்னைகள் வந்திருக்கலாம். ஆனால், அனைத்தையும் தாண்டி இத்தனை வருடங்களாக ஒன்றாக இருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் கைவிடாமல் இருப்பீர்கள்.

2. நண்பர்களை இழப்பதில் வருத்தம்கொள்ள வேண்டாம். ஏனெனில், உங்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்களும் பாசம் வைத்திருப்பவர்களும் எப்போதும் உங்களை விட்டு நீங்க மாட்டார்கள். எத்தனை சண்டைகள் வந்தாலும், அதனை சரிசெய்யத்தான் பார்ப்பார்களே தவிர, விலகிச் செல்லும் முடிவை எடுக்கவே மாட்டார்கள். ஆனால், விலக வேண்டும் என்ற முடிவை எடுத்தால் எப்படியும் ஒருநாள் உங்களை விட்டு சென்றுவிடுவார்கள்.

3. நட்பு என்றால் எப்போதும் அவர் உங்களுடனேயே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிறிது நேரம் சேர்ந்து இருந்தாலும் அதனை நினைத்துப் பார்க்கும்போது கண்ணீர் தேங்கி நிற்க வேண்டும் அல்லது உங்கள் உதட்டில் புன்னகை தவழ வேண்டும்.

4. அதேபோல், தினமும் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஏனெனில், எத்தனை நாட்கள் பேசவில்லை என்றாலும் யாரிடமாவது புலம்பத் தோன்றும் சமயங்களில் கண்டிப்பாக அவர் உங்களுடன் இருப்பார். எத்தனை நாட்கள் பேசவில்லை என்றாலும் மனம் சோர்வாகும் நேரத்தில் துணை நிற்பதே நட்பு. சிலர் அவர் நம்மை மறந்துவிட்டார் என்று தவறாக நினைப்பார்கள். ஆனால், உண்மையில் அவர் மனதில் உங்களுக்கான இடம் இருந்துக்கொண்டேதான் இருக்கும்.

5. ஒரு உண்மையான நண்பன் எந்த சூழ்நிலையிலும் உங்களை தனித்து விடவே மாட்டான். அது எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாயினும் அவனும் சேர்ந்து போராடுவானே தவிர, விட்டுவிட்டு மட்டும் செல்லவே மாட்டான்.

6. உங்கள் துக்கத்தை யாரிடம் வேண்டுமென்றாலும் புன்னகை கொண்டு மறைத்துவிடலாம். ஆனால், உற்ற நண்பனிடம் மட்டும் மறைக்கவே முடியாது. ஏனெனில், உங்கள் கண்கள் பேசும் பாஷையை அவர் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பார்.

7. நீங்கள் செய்யும் தவறை உங்கள் எதிரே நின்று சுட்டிக்காண்பிப்பது நண்பர் மட்டுமே. மற்ற அனைவருமே உங்கள் பின்னால் திட்டியும் உங்கள் முன் புகழ்ந்தும் பேசுவார்கள். ஆகையால், உங்கள் தவறை நேருக்கு நேர் கூறும் உங்கள் நண்பனை மட்டும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

8. சில நேரங்களில் உங்கள் மனமானது யாரிடமும் சொல்ல முடியாத அளவு துயரத்தில் மூழ்கி இருக்கும். அப்போது உங்களுக்கு யார் ஒருவர் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதோ, அவர்தான் உங்களின் உண்மையான நண்பர்.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT