Tortoise
ஆமை 
வீடு / குடும்பம்

வீட்டுக்குள் ஆமை புகுவது அபசகுனம் ஆகுமா?

பொ.பாலாஜிகணேஷ்

ழமொழிகளை சில நேரம், அதன் அர்த்தம் தெரியாமலேயே நாம் தவறாகப் புரிந்து கொண்டிருப்போம். ஆனால், அதற்கான அர்த்தமும் நோக்கமும் தெரிந்தால், ‘ஓஹோ’ என்று யோசிப்போம். அப்படி ஒரு பழமொழிதான், ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று சொல்வதும். ஆனால், அதன் உண்மை பொருள் என்னவென்று தெரியுமா?

பொதுவாக, ஆமை ஒரு வீட்டுக்குள் புகுந்து விட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதன் காரணமாகவே ஆமை என்றாலே அபசகுனம் என்று பலரது மனதில் எண்ணத் தோன்றுகிறது. அப்படி என்ன ஒரு சிறிய ஆமைக்கு மனிதனின் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவிற்கு சக்தி இருக்கின்றதா என்ன?

மகாவிஷ்ணு அவதார ஆமை

மகாவிஷ்ணு தசாவதாரத்தில் கூர்ம அவதார எடுத்தே அதர்மத்தை அழித்தார். ரமணர் போன்ற மகரிஷிகள் எல்லாம், ‘ஆமையை போன்று அடங்கியிரு’ என்பார்கள். ஆமை சலனமோ, சத்தமோ, ஆபத்தோ என்றால் கூட தன்னுடைய உடல் முழுவதையும் அதன் ஓட்டிற்குள் ஒடுக்கிக்கொள்ளும். அதைப்போன்று மனிதர்களாகிய நாம் ஐம்புலன்களையும் ஆமை போன்று அடக்கமாக வைத்துக் கொண்டால் நமது வாழ்வில் எந்த ஒரு பிரச்னைகளும் இல்லாமல் ஆமையை போன்று நலமாக வாழலாம் என்று சொல்வார்கள்.

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்வதற்கான உண்மையான காரணம் என்னவென்றால், ஆமை என்பது மிகவும் சாதாரண ஒரு உயிரினம், 150 ஆண்டுகள் வரைகூட வாழக்கூடியது. சிலர் இந்த ஆமையை வீட்டில் செல்ல பிராணியாகவும் வளர்த்து வருகின்றனர். ஆமை இயல்பாகவே மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் ஒரு பிராணியாகும்.

ஆமை அவ்வளவு எளிதாக ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிட முடியுமா? அதன் வேகத்துக்கு அது வாசலைக் கடந்து வீட்டுக்குள் வரவே பல மணி நேரம் ஆகுமே! ஒருவேளை இவ்வளவு மெதுவாக நகரும் ஆமை புகுவதைக் கூட கவனிக்க முடியாத அளவுக்கு அலட்சியமாக இருக்கும் சோம்பேறித்தனமான வீடு எப்படி உருப்படும்?

இப்படி மெதுவாக செல்லக்கூடிய பிராணியைக் கூட தெரியாமல் இருந்தால், அந்த வீட்டிற்குள் அந்நியர்கள் கூட மிக எளிதாக நுழைந்துவிடுவார்களாம். இதன் காரணமாகத்தான் ஆமை நுழைந்த வீடு உருப்படாது என்று கூறி வைத்ததன் பொருளாகும். மற்றபடி, ஆமைக்கும் கெட்ட சகுனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. ஆமை ஒரு சாதுவான பிராணியாகும். இதையெல்லாம் யாரும் கெட்ட சகுனம் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.

பள்ளிகொண்ட பெருமாளாகக் காட்சி அளிக்கும் அதிசய மலை!

ஜீரணப் பிரச்னைகளுக்குக் கைகண்ட மருந்தாக விளங்கும் ஓமம்!

வலிப்பு நோய்க்கு நிவாரணம் தரும் சடாமாஞ்சில் மூலிகை!

மனப் பதற்றத்தை உடனே குறைக்க உதவும் 10 எளிய வழிமுறைகள்!

ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட தமிழர்களின் வீரத்தைப் பறைச்சாற்றக்கூடிய ஆயுதம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT