Is it right to measure beauty by outward appearance?
Is it right to measure beauty by outward appearance? https://www.facebook.com
வீடு / குடும்பம்

புறத்தோற்றத்தை வைத்து அழகை அளவிடுவது சரியா?

பொ.பாலாஜிகணேஷ்

ருவரின் முகத்தோற்றத்தை வைத்து அவரது மனம் புண்படும்படி பேசினால் அது எவ்வளவு பெரிய பாவ செயல் தெரியுமா? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தோற்றம் உண்டு. அது மாறுபட்டே தீரும். அழகு என்பது தோற்றத்தில் இருப்பதல்ல. அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை நம்மில் பலர் இன்னும் உணரவில்லை.

முகத்தோற்றதை பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை. அவமானம் எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள்தான் அழகில் வெற்றியாளர்கள்.

அழகு என்பது புறம் சார்ந்ததா? அகம் சார்ந்ததா? என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள் ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று கூறினர். நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க பயிற்சி செய்தால் நலமாக இருக்கும்.

ஒரு ஊரில் குருவி ஒன்று இருந்தது. அந்தக் குருவி பல வண்ணத்தில் மிகவும் அழகாக இருந்தது. தான் மட்டுமே அழகு என எப்போதும் பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் கூட அழகைப் பார்த்தே முடிவு எடுக்கும் அந்தக் குருவி.

ஒரு நாள், காகம் ஒன்று வந்து அந்த குருவியிடம், ‘நாம் நண்பர்களாக இருக்கலாமா?’ எனக் கேட்டது. அதற்கு அந்தக் குருவி, நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன். உன்னை நீயே கண்ணடியில் போய்ப் பாரு’ என்று அசிங்கமாகத் திட்டி அந்தக் காக்கையை விரட்டி விட்டது. அந்தக் காக்கை மிகவும் வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டுப் போனது.

சில மாதங்களுக்கு பிறகு அந்தக் குருவிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அந்த குருவிக்கு இறகு எல்லாம் விழுந்து அழகு குலைந்து சாகும் தருவாயில் இருந்தது. இதைக் கேள்விப்பட்ட அந்த காகம் பதற்றம் அடைந்து மருந்து கொண்டு வந்து அந்த குருவிக்குக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் அருகிலேயே இருந்து அந்தக் குருவியை நன்றாகப் பார்த்துக் கொண்டது.

சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குருவி குணமடைந்தது. தனக்கு உதவி செய்த அந்தக் காகத்திடம், ‘எனக்கு துன்பம் வந்தபோது எனது நண்பர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால், நீயோ என்னை காப்பாற்றி விட்டாய். உலகிலேயே நீதான் அழகானவன். இனிமேல் நீதான் என் உயிர் நண்பன்’ என்றது.

யாரையும் அவர்களின் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தக் கூடாது. புறத்தோற்ற அழகு அழியக் கூடியது. ஆனால், அகத்தின் அழகோ அழியாதது, நிலையானது.

ஏனென்றால் அக அழகு என்பது அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நாணயம், நம்பிக்கை, தன்னடக்கம் என்று எல்லாவற்றையும் உள்ளடங்கியது. அதுதான் உண்மையான அழகு.

அது எல்லோராலும் பாராட்டப்படும் அழகு. ஆதலால்தான் மற்ற எல்லா வார்த்தைகளை விடவும் அழகு என்ற வார்த்தை வாயில் இருந்து உச்சரிக்கும்போதே நல்ல உணர்வைக் கொடுக்கிறது.

வெளித்தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணிக் கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள். இனிமேலாவது உருவத்தை வைத்து மற்றவரை அவமானப்படுத்தும் போக்கைக் கைவிடுங்கள். அவர்களும் உங்களைப் போலத்தான் மனம் படைத்தவர்கள்.

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

உங்கள் வாழ்வில் வசந்தம் வீசணுமா? இருக்கவே இருக்கு இந்த 3 அற்புதமான வழிகள்!

உலக நாடுகளில் அன்னையர் தினம்!

இந்த 5 தொழில்களை கிராமங்களில் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்!

SCROLL FOR NEXT