Tension that blocks success
Tension that blocks success 
வீடு / குடும்பம்

வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும் பதற்றம்!

சேலம் சுபா

‘பதறாத காரியம் சிதறாது’ என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். பசி, தாகம், உறக்கம், கோபம் போல் பதற்றம் என்பதும் நம் உணர்வுகளில் ஒன்று.  இவை சமநிலையில் உள்ளவரை யாருக்கும் எந்த பாதிப்புகளும் இல்லை. அதுவே அளவுக்கு மீறினால் ஆபத்து.

உதாரணமாக, விருந்துக்கு அதிக நபர்கள் வருகிறார்கள் எனும்போது சமைக்கும் இல்லத்தரசிக்கு பதற்றமாக இருக்கும். காரணம், விருந்து நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம். ஆனால், அதே பதற்றம் எல்லை மீறி உப்பு போடவேண்டியதில் சர்க்கரையும், சர்க்கரை சேர்க்க வேண்டிய இனிப்பில் உப்பையும் போட்டால் என்ன ஆகும்?

புது வேலை என்றால் பதற்றம், திருமணம் என்றால் பதற்றம் என எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் கலந்த பதற்றம் வரும். சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டுமே பயம் வந்து போகும். அதுவே நீடித்திருந்தால் நோயாக மாறுகிறது.

மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருந்தால் கவலைப்படவேண்டியதில்லை. திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் முன்னெச்சரிக்கை தந்து உதவுகிறது அந்த பயம்.

ஆனால், சிலர் பயம் அதிகமாகி எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள். வருங்காலத்தைப் பற்றியோ அல்லது ஏதோ விபரீதம் நடந்துவிடும் என்றோ அச்ச எண்ணத்திலேயே இருந்தால் அதுதான் மனப்பதற்றக் கோளாறு என்கிறது சைக்காலஜி உலகம்.

இந்தத் தேவையற்ற அதிகப் பதற்றம் வாழ்வில் பல பிரச்னைகளைத் தரும். பிறருடன் பழகுவதற்குத் தயங்குவது, மாணவர்கள் என்றால் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் தடுமாற்றம், நேர்காணல்களின்போது குழப்பம் போன்றவையெல்லாம் அன்றாட வாழ்கையை நடத்துவதிலேயே பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் நமது இலக்குகள் நோக்கி எப்படி முன்னேற முடியும்?

சாதாரண பதற்றம் என்பது இயல்பு வாழ்க்கையை சிதைக்க முற்படும்போது நமக்கு நிச்சயம் உளவியல் ஆலோசனை தேவைப்படுகிறது. இதனால்தான் பதற்றம் ஏற்படும்போது அமைதி தேடி சில விஷயங்கள் செய்வது அவசியமாகிறது. பதற்றத்தின்போது உருவாகும், ‘கார்டிசால்’ என்ற ஹார்மோன் உச்சி முதல் பாதம் வரைக்கும் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதயம் படபடப்பாக அடித்துக் கொள்கிறது என்று கூறுவார்கள். அடிக்கடி வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கை மற்றும் பாதம் குளிர்ச்சியாகி விடுவது, ஒரு செய்தி கேட்டவுடன் வயிற்றுப்போக்கு ஏற்படுவது, அதிகபட்ச உடல் சோர்வு போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் பதற்றத்தால் ஏற்படும்.

வெற்றிக்கு முட்டுக்கட்டையாகும் அதிக பதற்றம் குறைய 1 முதல் 100 வரை எண்ணுவது, தியானம், அமைதியான ஆலயம் செல்வது, இயற்கை சூழலில் மனதை ஆற்றுப்படுத்துவது, சேவைகளில் அல்லது பிடித்த விஷயங்களில் சிந்தனையை திசை திருப்புவது, நம்பிக்கையானவரிடம் பேசுவது போன்ற பல வழிகள் உள்ளன. மூச்சை ஆழ்ந்து இழுத்து விடும் பயிற்சி விரைவில் பதற்றத்திலிருந்து விடுபட எளிய வழி. இவற்றில் நமக்கு ஏற்ற வழியைக் கடைப்பிடித்து பதற்றம் தவிர்த்து, வாழ்வில் வெற்றி பெறுவோம்.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT