இந்த உலகில் மிகச்சிறந்த வெற்றியாளர்களாகக் கருதப்படும் பலர் அமைதியான குணம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அமைதியாக இருப்பது என்ன அவ்வளவு பெரிய திறமையா? அவர்கள் மட்டும் எப்படி வெற்றி பெறுகிறார்கள்? அந்த முழு உண்மைகளையும் இப்பதிவின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
அமைதியாக இருக்கும் நபர்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் என்னவென்றால் அவர்கள் பிறர் சொல்வதைக் கேட்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பிறர் சொல்வதை உண்மையாக கேட்பதற்கு நேரம் ஒதுக்குவதன் மூலம், பிறரைப் பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியும். இது அவர்களுக்குள் வலுவான இணைப்பை ஏற்படுத்தி, உறவுகளை சரியாகக் கையாள வழிவகுக்கிறது. உறவுகளை கையாளத் தெரிந்தாலே நீங்கள் வாழ்க்கையில் வெற்றியாளராக மாற முடியும்.
அமைதியாக இருப்பது ஒரு செயலில் கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் மூலமாக தேவையில்லாத சத்தம் மற்றும் கவனச் சிதறல்களை நீக்கி ஒருவரது உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும் என்பதால், அமைதியாக இருப்பவர்கள் அவர்களது வேலையில் முழு கவனத்துடன் சிறப்பாக செயல்பட முடியும்.
மேலும், அமைதியாக இருப்பவர்கள் பேசுவதற்கு முன் அதிக நேரம் சிந்திக்க ஒதுக்கிறார்கள். இது சரியான இடத்தில் சரியான பதிலை தேர்ந்தெடுத்து பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக தொழில் சார்ந்த சூழ்நிலைகளில், அமைதியாக அனைத்தையும் கவனித்து சரியாக பதிலளிப்பது உங்களுக்கான வெற்றி விகிதத்தை அதிகரிக்கும்.
அமைதியாக இருந்தால் பல விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும். ஏனெனில், நீங்கள் பெரும்பாலான நேரத்தை உங்கள் எண்ணங்களுடன் செலவழிக்கிறீர்கள் என்னும்போது, பல புதிய விஷயங்களை கற்பதற்கு உங்களுக்கு உந்துதல் ஏற்படும். இது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
எனவே நீங்களும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என விரும்பினால், எங்கு தேவையோ அங்கு மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் பிறரிடம் பகிராதீர்கள். பிறர் ஏதாவது கேள்வி கேட்டாலும் அதற்கு நன்கு யோசித்து புத்திசாலித்தனமாக பதில் கூறுங்கள். தேவையில்லாமல் உங்களை நீங்களே பிறரிடம் மட்டம் தட்டி பேசாதீர்கள்.
மௌனத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி, உங்களது கேட்கும் திறனை அதிகரித்து, கவனச் சிதறலின்றி எல்லா வேலைகளையும் செய்யும்போது, வெற்றி நிச்சயம் உங்களிடம் வந்து சேரும். இத்தகைய யுக்திகளைப் பின்பற்றியே அமைதியாக இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகின்றனர்.