Motivation article Image credit - pixabay
Motivation

நைச்சியமா பேசிப் பழகினா நிச்சயமா வெற்றிதான்!

சேலம் சுபா

து ஒரு இறைவழி பாட்டுக்கூடம். அங்கு எப்பொழுதும் சிறு பிள்ளைகளும் வயதானவர்களும் கூடி பஜனைகளை பாடி வருவார்கள். பாதி பேர் பஜனை பாட வருகிறார்கள் என்றால் மீதி பேர் அங்கு தரப்படும்  பிரசாத வகைகளை சாப்பிடுவதற்கு என்றே வருபவர்கள். தோழிகள் இருவர் எப்பொழுதும் அங்கு வருவது வழக்கம். அவர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவயது புத்திசாலி தோழிகள். ஆனால் அதில் ஒருவள் எல்லோரிடமும் வலியச் சென்று பேசுபவள். மற்றவளோ பேச கூச்சப்படுபவள்.

பள்ளி விட்டதும் நேராக இந்த பஜனை குழுவுக்கு வந்து சாப்பிட்டு செல்வது அவர்களின் வழக்கம். அந்த இருவரில் ஒரு சிறுமிக்கு மட்டும் எப்பொழுதும் அங்கு இருக்கும் தலைமை சாதுவிடம் நல்ல பெயர் இருக்கும். அவளுக்கு மட்டும் எப்பொழுதும் பிரசாதம் இரண்டு மடங்காக கிடைப்பது வழக்கம். இதை மற்றவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். "அது எப்படி உனக்கு மட்டும் இரண்டு மடங்கு தருகிறார்கள்? நீ அப்படி என்ன செய்தாய்? அவர்களிடம் ஏதாவது எனக்கு தெரியாமல் வந்து உதவிகள் செய்கிறாயா அல்லது உன் பெற்றோர்களுக்கு அவர்கள் நெருக்கமானவர்களா? "என்பது போன்ற பல சந்தேகங்களை அந்த தோழி கேட்டாள்.

அதற்கு பதிலாக மற்றவள் சிரித்தபடியே சொன்னாள் "நான் ஒன்றும் செய்யவில்லை. நேராக அவரிடம் சென்று நீங்கள் இங்கு இருப்பது எங்களுக்கெல்லாம் கடவுள் இருப்பது போல. நாங்கள் நல்லவர்களாக இருப்பதற்காக நீங்கள் இதுபோன்ற செயல்களை செய்கிறீர்கள். உங்களுக்கு நன்றிகள். அந்த கடவுளையே எப்பொழுதும் உங்களிடம்தான் பார்க்கிறேன் என்று சொன்னேன் . அன்றிலிருந்து அவர் என் மீது கருணை கொண்டு எனக்கு தனியாக எடுத்து வைத்து விடுகிறார்". என்றாள்.

"இனி நாமும் நைச்சியமா பேசி காரியத்தை சாதிக்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டாள் கேள்வி கேட்டவள்.  (நைச்சியம் என்பதற்கு நயம் என்ற பொருளும் கொள்ளலாம்) "வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்'"என்று சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு கடவுள் தந்த மகத்தான பரிசு பேச்சுதான். பேச்சின் மூலம் நமது மனதின் எண்ண ஓட்டங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். தனிமனிதனின் தேவைக்கு மட்டுமல்லாமல் சமூகத்தின் தேவைக்கும் பேச்சு அவசியமாகும்.

நமது வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது நமது பேச்சு. ஒரு சிலரை "அவனுக்கென்ன? நைச்சியமா பேசியே ஈசியா காரியத்தைச் சாதிச்சுப்பான்" என்பார்கள். பிறரைக் கவரும் வகையில் பேசத் தெரியாதவர்கள் எத்தனை திறமைகள் இருந்தாலும் முன்னேறத் தெரியாமல் நிற்பார்கள்.  நம் கருத்தை ஆணித்தரமாக வெளியிடத் தேவையான பேச்சுத்திறன்  கலை வடிவமாகவும் உருப்பெற்று தனி மனித மற்றும் சமூகத்தின்  இன்றியமையாத அடையாளமாகவும் ஆளுமைத் திறனாகவும் வளர்ந்திருக்கிறது.

கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி, நூறுபேரில் ஒருவருக்கே கிடைக்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராகத் திகழ்வார். ஆனால், பத்தாயிரம் பேரில் ஒருவரே சிறந்த பேச்சாளராகத் திகழ்வார் என்று மூத்த தமிழறிஞர் ஔவையாரும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஆற்றல் வாய்ந்த பேச்சில் சிறிது நைச்சியமும் இருந்தால் கேட்பவர் மனதில் எளிதாக இடம் பிடிக்கலாம்.

முழுமையான திட்டங்களைத் தராமல் நைச்சியமாக பேசியே ஆட்சியைப் பிடித்தவர்களும் உண்டு. பேசத் தெரியாமல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதுபோல் பேசி பதவியை இழந்தவர்களும் உண்டு. வெற்றியாளர்களை நன்கு கவனியுங்கள். ஆளுக்கு ஏற்றாற்போல் பல தோரணைகளில் நைச்சியமா பேசிப் பழகி அவர்களால் ஆதாயமடைவார்கள்.

"காரியம் ஆகணும்னா கழுதை காலில் கூட விழலாம்" என்பார்கள். நாம் அதையெல்லாம் செய்யவேண்டாம். பிறர் மனதை கவருமாறு நைச்சியமா பேசி நைசா வெற்றியை நோக்கி செல்வோம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT