motivation article Image credit - pixabay
Motivation

தவறுகள் கற்றுத்தரும் பாடங்களை அறிந்தால் வெற்றிதான்!

சேலம் சுபா

நீங்கள் இலக்கு வைத்து செய்த செயலில் தவறு நடந்துவிட்டதா? கவலையே வேண்டாம். வெற்றிக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள். தவறுகளில் இருந்து உருவானதுதான் பெரிய வெற்றிகளும் சாதனைகளும்.

உதாரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவர்தான் சென்ற பயணத்தில் தவறாக சரியான வழியைத் தவறவிட்டதால்தான் அவரால் தற்போதைய வல்லரசான அமெரிக்காவைக் கண்டுபிடிக்க முடிந்தது. அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கின் தவறு அவரை பென்சிலின் கண்டுபிடிக்க வழிவகுத்தது. இப்படி சாதனை வரலாறுகளில் இருக்கும் தவறுகளை நிறைய சுட்டிக்காட்டலாம்.

அன்றாடம் பயன்படுத்தும் பால் திரிவதை  தயிராக மாற்றுகிறோம். பாலைவிட தயிருக்கு மதிப்பு அதிகம். அதையே வேறு சில பொருள்களைச் சேர்த்து மேலும் அது பாலாடைக்கட்டியாக உருமாறுகிறது. தயிர் மற்றும் பால் இரண்டையும் விட பாலாடைக்கட்டி மிகவும் மதிப்பு வாய்ந்தது  என்பதை அறிவோம்.

இதே வழியில் திராட்சைசாறு புளிப்பாக மாறினால், அது திராட்சை சாற்றை விட அதிக விலை கொண்ட ஒயினாக மாறுகிறது. தவறுகளால் மதிப்புக் கூட்டப்பட்டு மேலும் மதிப்பு மிக்கதாகிறது இதுபோன்ற பல பொருட்கள்.

தவறு செய்ததால் நாம் மோசமானவர்கள் என்று அர்த்தம் இல்லை. தவறுகள் என்பது நம்மை மிகவும் மதிப்புமிக்கதாக மாற்றும் அனுபவங்கள் என்பதே சரி.

ஆனால் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். ஆம் நம் தவறுகள் நமது உற்சாகத்தைப் பிடுங்கி வீழ்த்த மட்டும் விடவே கூடாது.

இரு நண்பர்கள் இருந்தனர். இருவரும் படித்து முடித்துவிட்டு அவரவர் தந்தையின் சுயதொழிலில் இறங்கிவிட்டனர். ஒரு வருட காலம் கழித்து இருவரும் சந்தித்தனர். அதில் ஒருவன் சொன்னான் நான் இதுவரை என் தந்தையின் தொழிலில் தவறுகளை மட்டுமே செய்து வருகிறேன். இது எதில் சென்று முடியுமோ தெரியவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறான்.

அடுத்தவன் அவனது சமாதானப்படுத்தி "சில தவறுகள் நானும்தான் செய்கிறேன். பார்க்கலாம் அடுத்த வருடம் இருவரும் எப்படி இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு பிரிந்து சென்றனர்.

மறு வருடம் வந்தது. எப்போதும் தவறுகளை செய்கிறேன் என்று சொன்னவன் தன் தந்தையின் தொழிலை லாபகரமானதாக்கி முன்னுக்கு கொண்டு வந்து விட்டிருந்தான். மற்றவனோ மனம் உடைந்துபோய் தந்தையிடமிருந்து விலகி வேறு தொழில் ஏதாவது செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். காரணம் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி உடன் இருந்தவர்கள் அவனை தீராத மனவேதனைக்கு உள்ளாக்கி அவனை சோர்வடையச் செய்ததுதான்.

தந்தையும் அவர்களுடன் சேர்ந்து திட்டியதுதான் அவனின் பெரிய வேதனை. அவனை சமாதானப்படுத்தி "அவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். நீ மட்டும் எப்போதும் வீழ்ந்து விடாதே. அது அவர்களுக்குத்தான் வெற்றி. ஆகவே இனி நீ செய்யும் தவறுகளை நன்கு கவனித்து அதிலிருந்து பாடங்களை கற்று வெற்றி பெற நினை" என்று ஊக்கம் தந்து அனுப்பினான் அவன் நண்பன். சிறிது காலம் கடந்தது. அந்த ஊரின் வெற்றி மனிதர்கள் வரிசையில் இருவரும் இடம்பிடித்தனர்.

அங்கு வந்த பெரியவர் ஒருவர் இருவரையும் பாராட்டி நீண்ட நேரம் பேசினார். அதில் அவர்களைக் கவர்ந்து மனதில் நின்ற வாசகம் இதுதான். '"வெற்றியாளர்களிடம் இருந்து நாம் ஒன்றும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. தன்னுடைய தவறுகள், தோல்விகள், வெட்கங்கள் இவற்றை வெளிப்படுத்தும் உண்மையைச் சொல்பவர் களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறோம்.” நாமும் இதை மனதில் நிறுத்தி தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்று மதிப்புமிக்கவர்களாக மிளிர்வோம்.

Wow… Wow… செஸ்வான் நூடுல்ஸ் ரெசிபி! 

பணப்பயிர் சணலின் பயன்பாடுகள் தெரியுமா?

உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!

விவாகரத்து பெற்ற பின்னர் அதை வாபஸ் பெறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? 

Trisha's Beauty secrets: நடிகை த்ரிஷா அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT