அழகான வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவதிலேயே நம்மில் பெரும்பாலானோர் நேரம் கழிகிறது. மனம் முழுவதும் சந்தேகங்களையும் கவலையும் சுமந்து கொண்டு வெளியே சிரிப்பது போல் நடிப்பது அழகான வாழ்க்கை ஆகுமா? அல்லது கோடி கோடியாக பெட்டியில் குவித்து வைத்து உதவி என்று வருபவர்களை புறக்கணிப்பது அழகான வாழ்க்கை ஆகுமா?
மூன்று வேளை உணவு. இருக்க இடம். உடுத்த உடை இருந்தால் அதுவே நிம்மதி என்பவர்களும் உண்டு. ஆனால் பல கலவையான உணர்வுகளை கொண்டு அலையும் மனதிற்கு அவைகள் மட்டுமே போதுமா? சரி… அப்போது அழகான வாழ்க்கை என்பதுதான் என்ன?
நம்முடன் பயணிக்கும் மனிதர்களின் மனம் புரிந்து ஒருவர் மீது ஒருவர் அன்புடன் முக்கியமாக சந்தேகம் எனும் கரையான் அரிக்க விடாமல் களங்கமற்ற மனதுடன் வாழ்வது அழகான வாழ்வாகிறது.
இதற்கு ஒரு கதை உண்டு. நீங்களும் படித்திருப்பீர்கள். ஒரு காவலாளி தன் முதலாளிக்கு எவ்வளவுதான் வணக்கம் சொல்லி மரியாதை தந்தாலும் அவர் கவனிக்காமல் செல்கிறார். இதனால் அவர் மீது காவலாளிஅசூயை ஏற்படுகிறது. பணக்காரங்கனாலே இப்படித்தான் என்று நினைக்கிறார்.
பெரிய குடும்பத்துடன் வறுமையில் வாடும் காவலாளியின் வீடு தேடி எப்போதும் உணவுப் பைகள் வருகிறது. அதை யார் அனுப்புகிறார் என்பது தெரியாமலே இருக்கிறது. ஒரு நாள் அந்த முதலாளி இறக்கிறார். அன்றிலிருந்து உணவு வருவதில்லை.
காவலாளி முதலாளியம்மாவிடம் சொல்லி மேலும் அதிக சம்பளம் கேட்கிறார். அந்த அம்மாள் கண்களில் நீர்.
"ஓ.. என் கணவர் உங்களுக்காகத்தான் அந்த உணவை சமைக்க சொன்னாரா?" இதைக் கேட்ட காவலாளியின் கண்களிலும் நீர். தலைகுனிந்து வெளியேறுகிறார்.
அடுத்த நாள் முதலாளியின் மகன் உணவுப் பையை காவலாளி வீட்டுக்கு எடுத்து வருகிறான். அவனிடம் நன்றி என்கிறார் காவலாளி.
அவனும் இவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் போகவும் இவர் பொறுக்க முடியாமல் சத்தமாக "என்ன நீங்கள்? நன்றி சொல்வதைக் கூட கவனிக்க மாட்டீர்களா? " என சொல்ல அந்த மகன் நின்று நிதானமாக" நீங்கள் என்னவோ சொல்கிறீர்கள்? ஆனால் எனக்குத்தான் புரியவில்லை.. என் தந்தையைப் போலவே எனக்கும் காதுகள் கேட்காது. மன்னிக்கவும்" என்று போகிறான்.
காவலாளி விக்கித்து நிற்கிறார். அன்பான இவர்களைப் போய் சந்தேகப்பட்டேனே என்று நொந்து கொள்கிறார்.
இவர்களில் அந்த செல்வந்தர் குடும்பத்தின் வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது? நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலேயே அவர்களைத் தவறாக முடிவெடுத்து விடுகிறோம்.
அடுத்தவர்களது நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத் தன்மையை அறியாமல் நாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். நமது வாழ்க்கையை வருத்தத்துடன் வாழ்கிறோம். எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே அதை நம்பி, நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரு முடிவுக்கு வரும் முன் யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய், ஆனந்தமாய் அமையும். நமக்கும் அன்பு குடும்பத்தாருக்கும், எப்போதும் மன அமைதியும்
சந்தோஷமும் என்றென்றும் நிலைக்கும்.