மூன்றாம் பிறை
மூன்றாம் பிறை https://tamil.webdunia.com
ஆன்மிகம்

மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தின் பலன்கள் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

வ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள் மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் நிலவு தெரியும். அந்த நிலவு அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்பே 6.30 மணி அளவில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆயுள் விருத்தி உண்டாகும். மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தம் ஆகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தம் ஆகும். எனவே, மாலை வேளையில் சந்திர தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.

திருமணமானவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றும் சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தனது முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் ஆனந்தமும் மன அமைதியும் கிடைக்கும். வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

ஒரு சமயம் விநாயகர், சிவபெருமானின் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார் விநாயகர். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர், சந்திரனையும் பார்க்கச் சென்றார். சந்திரன் ஒரு முழு வெண்மதி என்பதால் விநாயகரின் திருவுருவைப் பார்த்து பரிகசித்தான்.

இதனால் கோபமுற்ற விநாயகர், ‘உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்’ என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. அதனால் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலையடைந்த சந்திரன், மனம் வருந்தி சிவனை நோக்கி கடுந்தவம் இருந்து, தனது பழைய அழகை பெற்றான். மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாவதோடு, ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோஹிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தைக் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால் சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தைப்  பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.

நான்கு மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்தால் நம் வினை நாசமாகும். ஐந்து மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசனாவான். ஆறு மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசனம் செய்தால் திருமணம் தடையின்றி நடைபெறும். ஏழு மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசனம் செய்தால் தீராத கடன் தீரும். பத்து மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால் பாரில் புகழ் ஓங்கும். வருடம் முழுவதும் மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்தால் வம்ச விருத்தியாகும். நீடித்த மூன்றாம் பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும். மூன்றாம் பிறையை தரிசனம் செய்யும்பொழுது,

‘ஓம் பத்மத் வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னோ சந்திர ப்ரசோதயாத்’

என்று கூறி தரிசித்தால் வாழ்வில் வளம் பெருகும்.

விநாயகருக்கு மூஷிக வாகனம் வந்த கதை தெரியுமா?

வாற்கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள்!

மனதை நெகிழச் செய்யும் கும்பகர்ணனின் செஞ்சோற்றுக்கடன்!

The Locus Rule: இதை உணர்ந்தால் எதையும் சாதிக்கலாம்!

மெனோபாஸ் காலத்தில் பெண்கள் அவசியம் உட்கொள்ள வேண்டிய 6 வகை உணவுகள்!

SCROLL FOR NEXT