Home Doorstep
Home Doorstep 
ஆன்மிகம்

வீட்டுத் தலைவாசலை மிதிக்கக் கூடாது; ஏன் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

வீட்டில் நாம் நுழையும் முதல் இடமாக நிலைவாசல் எனப்படும் தலைவாசல் உள்ளது. இதன் மேல் ஏறி நின்றாலோ அல்லது மிதித்து நடந்தாலோ பெரியவர்கள் திட்டுவதுண்டு. தலைவாசல் மேல் ஏன் நடக்க கூடாது? காரணத்தை விளக்குகிறது இந்தப் பதிவு.

ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதைப் போலவே, அவர்களின் குலதெய்வமும் வாசம் செய்கிறது என்பது நம் மூத்தோர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் ஐதீகம். உங்களின் குலதெய்வம் வீட்டில் இருக்கும் கதவில் குடியிருக்கும் என்பதால் தான், அன்றைய காலத்தில் வாசல் கதவை சத்தமாகத் திறக்கவும், மூடவும் மாட்டார்கள். மேலும் அடிக்கடி எண்ணெய் விட்டு சுலபமாகத் திறக்கவும் வழிவகை செய்வார்கள். கதவின் தாழ்ப்பாளை குழந்தைகள் ஆட்டி விளையாடும் போது, அப்படி செய்யக் கூடாது என பெரியவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

பண்டைய காலத்தில் வாசலின் இருபுறமும் விளக்கேற்றி வைப்பார்கள். இதன் பின்னால் ஒரு ஆன்மீகத் தத்துவம் மறைந்துள்ளது. வாசல் கதவின் இருபறத்திலும் கும்ப தேவதைகள் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. கும்ப தேவதைகளைக் குளிர்விக்கும் எண்ணத்தில் தான் விளக்கு ஏற்றப்பட்டு வந்தது. அதோடு நாம் வீட்டில் நுழையும் போது குனிந்து சென்று கும்ப தேவதைகளை வணங்குவதை உணர்த்துவதற்காகத் தான், கதவின் நுழைவாயிலின் உயரத்தைக் குறைவாக வைப்பர். ஆனால் இன்று இப்பழக்கம் மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

கோயில்களுக்கு நாம் செல்லும் போது எப்படி தலைவாசலை மிதிக்காமல் தாண்டிச் செல்கிறோமோ, அதுபோல கோயிலாக விளங்கும் நம் வீட்டின் தலைவாசலையும் மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும். வாசல் கதவுகளுக்கு மஞ்சள் குங்குமம் பூசப்படுவதும் இந்த கும்ப தேவதைகளை பூஜிப்பதற்காகத் தான். தெய்வீகம் மிகுந்த வாசல் படியில் நிற்பதும், உட்காருவதும், தலை வைத்துப் படுப்பதும் தவறான செயலாகும். இப்படிச் செய்வதால் தரித்திரம் நம்மைத் துரத்தும். மேலும் வீட்டிற்கு வரும் பணவரவும் குறைந்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் நிம்மதி சீர்குலைந்து விடும். இதுதவிர கெட்ட சக்திகள் வீட்டில் உள்நுழையவும் வாய்ப்புள்ளது.

நீங்கள் எங்காவது தொலைதூரப் பயணம் மேற்கொண்டு, அங்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் முதலில் உங்களுக்குத் துணையாக வருவது குலதெய்வம் தான். குலதெய்வத்தின் சக்தியை உணர்ந்து எப்போதும் நமது முதல் மரியாதையை குலதெய்வத்திற்கு அளிப்போம். பல்வேறு இடர்கள் வந்தாலும் குலதெய்வத்தின் துணை இருந்தால், மீண்டு வர முடியும் என்பது பலருடைய நம்பிக்கையாகும். ஆகையால் குலதெய்வமும், அஷ்டலட்சுமியும் வாசம் செய்யும் வாசல் கதவின் இருபுறங்களிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி பழைய பண்பாட்டை மீட்டெடுப்போம். இதுவரையில் தெரியாமல் செய்த தவறுகளை விட்டுவிடுங்கள். இனியாவது வாசல்படியின் மீது நடப்பதை தவிர்த்து விடுவோம்.

இந்தியாவில் ஜிகா வைரஸ் பரவல் எச்சரிக்கை… அறிகுறிகள் என்ன?

உண்மையான மகிழ்ச்சி எதில்தான் இருக்கிறது?

முருங்கை மரம், முருங்கைக்கீரை, முருங்கைக்காய் இவை கனவில் வந்தால் என்ன அர்த்தம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

என்னது...!! மரம் நடக்கிறதா?

தனியாகப் பயணம் செய்ய ஆசையா? அப்போ இது உங்களுக்குத் தான்!

SCROLL FOR NEXT