கடவுள் என்பவர் இருக்கிறாரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி அறிவதற்கு அனைவருக்கும் ஆவலுண்டு. அவரவர் அனுபவத்தின்படி கடவுள் என்பவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்று அடையாளம் காணப்படுகிறார். ஆன்மிகவாதிகளும் தத்துவ ஞானிகளும் கடவுளை பலவிதங்களில் மக்களுக்கு அறிமுகப்படுத்தி கடவுள் பற்றிய தெளிவைத் தந்து சென்றுள்ளனர். அதில் நம் காலத்து கவியரசரான தத்துவஞானி கண்ணதாசன் அவர்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி சொன்னவை இங்கு:
* கடவுள் என்பவன் ஆகாயத்தின் மேலிருந்து மனிதனை ஆட்டி வைப்பான்; மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.
* பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்; பின்னர் புகழுக்காக வாழும்போது புரட்டியும் எடுப்பான்.
* பூவிலே கொஞ்சம் தேனை வைப்பான்; அங்கே தேன் வைத்ததை தேனீக்கும் சொல்வான்; பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
* கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கு வைப்பான்; அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.
* ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை மானுக்குக் கொடுப்பான்; பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான்.
* அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவைக் கொடுப்பான்; அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
* தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்; அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.
* நாட்டை ஆள விட்டு அழகு பார்ப்பான்; அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவன், தானே பிடுங்கவும் செய்வான்.
* புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்; தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.
* கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்; தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.
* மாளிகையில் வாழ்பவன் ஆயுளை அற்பமாய் முடியச் செய்வான்; சாலையோரம் வாழ்பவனை நூறாண்டு வாழ வைப்பான்.
* தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்; உள்ளத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.