Sri Shirdi Sai Baba 
ஆன்மிகம்

நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாவும் தேவன் கை பொம்மைகளே!

ரேவதி பாலு

லகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டவே கடவுளின் அவதாரங்கள் நிகழ்கின்றன. மஹான்களும் மக்களுக்கு நன்மை செய்யவேதான் அவதரிக்கிறார்கள். 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது',  'ஆட்டுவிப்பவன் அவன்.  ஆடுபவர்கள் நாம்',  அன்றாடம் நம் வாழ்வில் நடப்பவை  அனைத்தும் இறைவன் எண்ணப்படி நடக்கின்றன. ஷீரடி சாயி சரிதம் ஒரு சத்புருஷனின் சரித்திரம். இதில் ஒரு அருமையான கதை கடவுளின் கைகளில் நாம் வெறும்  கருவிதான் என்பதை மிக அழகாக நமக்கு உணர்த்துகிறது.

ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி என்கிற தேம்பே ஸ்வாமிகள் ஒரு சமயம் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் ராஜமகேந்திரபுரத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவர் ஒரு மாபெரும் ஞானி. நாந்தேட் நகரத்தில் வசித்து வந்த வக்கீல் புண்டலிக்ராவும் மற்றும் சில பக்தர்களும் அவரை தரிசிப்பதற்காக ஒரு குழுவாக அங்கு வந்து சேர்ந்தனர்.    இயல்பான குசலப்ரசனம் முடிந்த பிறகு ஷீரடி பற்றிய பேச்சு வந்தது.

பாபாவின் பெயரைக் கேட்டவுடனே ஸ்வாமிகள் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு, "ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. ஆனால், சாயியின் விஷயத்தில் விதிவிலக்கு உண்டு.  அவர் என் சகோதரர். அவரிடத்தில் எனக்கு மட்டற்ற அன்பு உண்டு" என்றார். பிறகு ஒரு தேங்காயை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "நீங்கள் ஷீரடிக்குச் செல்லும்போது இந்தத் தேங்காயை என் வணக்கங்களுடன் என் சகோதரரிடம் என் சார்பில் அர்ப்பணித்து விடுங்கள்" என்றார். புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச் செல்ல சம்மதித்தார்.  பாபாவை சகோதரன் என்று இந்த ஸ்வாமிகள் அழைப்பது சரியே. ஏனென்றால், அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும் பகலும் அவர் காத்து வந்ததைப் போலவே பாபாவும் தமது அக்னிஹோத்திரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரிய விட்டுக் கொண்டிருந்தார்.

சீக்கிரமாகவே புண்டலிக்ராவிற்கு நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஷீரடிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.  அவர்கள் மறக்காமல்  தேம்பே ஸ்வாமிகள் கொடுத்த தேங்காயையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.  மன்மாட்டில்  இறங்கியபோது கோபர்காவ் வண்டி கிளம்ப இன்னும் நேரம் இருந்ததால் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள  அருகிலிருந்த ஓடைக்கு தண்ணீர் பருகச் சென்றனர். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று குழுவில் ஒருவர் சொன்னார்.  மற்றொரு நண்பர் தன்னிடமிருந்த 'சிவ்டா' என்கிற  அவல் பலகாரப் பொட்டலத்தை  சாப்பிட்டு விட்டு தண்ணீர் பருகலாம் என்று சொன்னார். ஆனால், அவல் அதிகக் காரமாக இருந்தது.  குழுவில் ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப் பூவை அதனுடன் கலந்து விடலாம் என்று  யோசனை சொல்ல, அவ்வாறே செய்தனர்.

தேங்காய்  துண்டுகள் கலந்த  சுவையான 'சிவ்டா'வை உண்டு தண்ணீர் குடித்தனர். தேங்காய் என்று சொன்னவுடனே தேங்காய் வந்தது. அது யாருடையது என்கிற கேள்வியே எழவில்லை. வயிறு பசித்ததால் எல்லாவற்றையும் மறந்து போனார்கள். தேங்காய் உடைக்கப்பட்டு உண்ணப்பட்டு விட்டது என்பதை உணர்ந்த புண்டலிக்ராவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. பாபா பாதங்களில் சமர்ப்பிக்க இருந்த தேங்காயை தாங்கள் உண்டது அவருக்கு செய்யப்பட்ட அபசாரம் என்று நினைத்து மனம் வருந்தினார். இப்பேர்ப்பட்ட தவறை செய்து விட்டோமே என்று  பயந்து நடுங்கிப் போனார்.

பாபாவுக்கு  தேம்பே ஸ்வாமிகள் தேங்காய் அனுப்பியுள்ள செய்தி கம்பியில்லா தந்தி மூலம் எப்பொழுதோ வந்து விட்டது. பாபா அவராகவே தமது சகோதரன் தனக்கு அனுப்பியுள்ள பொருளை கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார். அவர் பாபாவின் பாதங்களை பிடித்துக்கொண்டு, "தேங்காயை நினைவாக கொண்டு வந்தபோதிலும், பசி தீர்க்க ஓடைக் கரைப் பக்கம் சென்றதும் எல்லோரும் அதனை மறந்து விட்டோம்.  பலகாரம் செய்ய இந்த தேங்காயை உடைத்து அவலுடன் கூடச் சாப்பிட்டோம். இந்த பாபத்திற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? என்னை மன்னித்து விடுங்கள். மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாக கொடுத்து விடுகிறேன்" என்று கூறினார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு நகைத்த பாபா, "எத்தனை தேங்காய்களைக் கொடுத்தாலும் என் சகோதரன் கொடுத்தனுப்பிய அந்தத் தேங்காய்க்கு ஈடு இணையாகாது" என்று கூறினார்.

"இனிமேல் இதற்காக நீ வருத்தமடைய தேவையில்லை. எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டு உண்ணவும் பட்டது. நடக்க வேண்டியது நடந்து முடிந்து விட்டது. அநாவசியமாக 'நான் செய்தேன்' என்று  செயல்களின் கர்த்தாவாக உன்னையே நீ ஏன் ஆக்கிக் கொள்கிறாய்?  நற்கருமங்களையோ தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக் கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே. நான் கர்த்தா அல்ல என்ற அகங்காரமற்ற பாவத்தை பழக்கப்படுத்திக் கொண்டு எந்த செயல் செய்தாலும் எந்தத் தொந்தரவும் இருக்காது. எல்லாம் கடவுள் சங்கல்பம் என்று உணர்ந்து எல்லாவற்றிலும் முழுமையாக அகங்காரமற்றிரு. அதனால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார். பாபாவின் வார்த்தைகள் புண்டலிக்ராவை சமாதானப்படுத்த அவர் வேதனை மெல்ல மெல்லக் குறைந்து மனது அமைதியானது. பாபாவின் உபதேசத்தினால் அவர் மனதிலிருந்த பயம் மறைந்தது. எத்தகைய அழகான ஆன்மிக போதனையை பாபா இந்நிகழ்ச்சியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

வாழ்வில் நடப்பதெல்லாம் இறைவன் சங்கல்பமே, எல்லாவற்றையும் நடத்தி வைப்பவர் அவர்தான். நாமெல்லோரும் இறைவனின் கைகளில்  வெறும் கருவியே என்பதை சத்சரித்திரம் மூலம் உணரும்போது நம் உள்ளத்தில் மென்மேலும் அடக்க உணர்வே மேலோங்குகிறது.

ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் 106வது மஹாசமாதி தினம் இன்று. விஜயதசமி தினமான இந்நாளில்  ஸ்ரீ சாயி பாபா அருட்கருணையை எண்ணி போற்றுவோம்.

கடற்குச்சிகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம்!

அச்சச்சோ… உங்க டூத் பிரஷ்ஷை உடனே தூக்கி போடுங்க! 

டி20 உலகக்கோப்பை இறுதிபோட்டியில் முழங்காலில் காயம் ஏற்பட்டதுபோல நடித்தேன் – ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

சிறகடிக்க ஆசை: வீட்டை விட்டு வெளியேறும் ஸ்ருதி.. அமைதிகாக்கும் ரவி!

ருசியான கொண்டைக்கடலை அடை - கோவக்காய் சட்னி செய்யலாம் வாங்க!

SCROLL FOR NEXT