Kaliyuga Venkatesa Perumal Temple 
ஆன்மிகம்

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

னைத்து பெருமாள் கோயில்களிலும் பொதுவாக, வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும். ஆனால், தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற கலியுக வேங்கடேச பெருமாள் கோயிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்துள்ளது. இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள் பின்னர் சொர்க்கவாசலை பயன்படுத்தி வெளியே வருவதை தினமும் செய்கிறார்கள். எனவே, இந்தத் தலம் நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோயில் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

எல்லா கோயில்களிலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும் நுழைவு வாசலும் இருக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கி மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றுதான் நுழைவு வழி பெருமாள் கோயில்களில் எல்லாம் வடக்கு வாசல் என்பது வைகுண்ட ஏகாதசி என்று சொர்க்கவாசல் என்ற பெயரில் திறக்கப்படும்.

உள்ளே மகாமண்டபத்துக்குள் வடக்கு கோபுரம் வாசல் வழியே நுழைந்தால் விநாயகர் சிலைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அதே வரிசையில் கருடாழ்வார் மேற்கு பார்த்தபடியும் மூலவரை வணங்கிக் கொண்டிருக்கிறார். சதுர்புஜ வரதராஜ பெருமாளுடன் லட்சுமி தேவி அமர்ந்திருக்க பக்கத்தில் பூர்வ சஞ்சீவி ஆஞ்சனேயர் அருள்கிறார். இவர் மணிகட்டிய வாலை தலைக்கு மேல் உயர்த்தியபடி இடது கரத்தில் கடிமலர் ஏந்தி வலக்கரத்தால் ஆசி வழங்கியபடி இருக்கிறார். வழக்கமாக இறைவனின் கருவறை முன்பாக இருக்கும் துவார பாலகர்கள் ஜயன் விஜயன் என்று அழைக்கப்படுகிறார். ஆனால், இந்த ஆலயத்தில் இருக்கும் துவார பாலகர்கள் தீர்த்தர் கிஷ்கிந்தர் என்று அழைக்கிறார்கள்.

அஷ்ட லக்ஷ்மிகளின் உருவம் செதுக்கப்பட்ட மணிக்கரை வினை தாண்டி அர்த்த மண்டபத்துக்கு என்றால் கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேச பெருமாள் அருள்புரிகிறார். சங்கு, சக்கரம் ஏந்திய தடக்கையராக வரதஹஸ்தம் கடிஹஸ்தம் உடையவராக நான்கு கரங்களுடன் புன்னகைத் தவழ காட்சி தருகிறார். இருபுறமும் திருமகளும் நிலமகளும் நின்று அருள்செய்கின்றனர்.

பெருமாள் சன்னிதிக்கு நேரே கொடி மரமும் பலி பீடமும் உள்ளன. அதை ஒட்டி உள்ள மண்டப மேற்கூரையில் பன்னிரண்டு ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளன கொடி மரத்தின் முன் தங்களது ராசிக்குகீழ் நின்று பிரார்த்தித்துக் கொண்டால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வேங்கடேச பெருமாள், ‘தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசல் போல நுழைவு வாசல் வைத்து ஒரு கோயில் கட்டு’ என பணித்தார். மேலும், அவர் கூறுகையில் ‘இந்தத் தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கலியுக வேங்கடேச பெருமாள் வரதராஜ பெருமாளாகவும் மகாலட்சுமி சமேதராக சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் இரு கோலத்தில் எழுந்தருளி காட்சி தருவேன். இத்தலத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்திய சொர்கவாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்ற பலனையும் வைகுண்ட பதவியும் தந்தருள்வேன்’ என்று கூறி மறைந்தாராம்.

அதன்படி தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள் மராட்டிய சிற்பக் கலைகளின் கருவூலமாக திகழும் வகையில் இந்தக் கோவிலை கட்டினார்கள். இந்தத் தலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் புரட்டாசி சனிக்கிழமை தோறும் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.  தமிழ்நாட்டில் வடதிசை  ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோயில் இதுவாகும். இதன் காரணமாக இந்தக் கோயில், ‘நித்திய சொர்க்கவாசல் கோவில்’ என அழைக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள் ஆண்டு முழுவதும் நித்திய சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வரலாம் . இந்தக் கோயிலில் நவ கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார். இதன் மேல் தளத்தில் கல்லினால் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த சன்னிதிக்கு தனி விமானமும் கலசமும் உள்ளன. இங்குள்ள நவகிரகங்களை வழிபாடு செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பதை நம்பிக்கை.

இந்தத் தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் உத்ஸவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. மேலும், சிவாலயங்களில் சிவனுக்குரிய வில்வமரம் இந்த கோயிலில் மகாலட்சுமி அம்சமாகவும் தல விருட்சமாகவும் இருப்பது அபூர்வமான  விஷயமாகக் கூறப்படுகிறது.

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

Janhvi kapoor beauty tips: ஜான்வி கபூரின் அழகின் ரகசியம் இதுதான்!

SCROLL FOR NEXT