Chiranjeevigal 
ஆன்மிகம்

சாகா வரம் பெற்ற எட்டு சிரஞ்சீவிகள் யார் தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

ந்து புராணங்களின்படி சிலர் சாகா வரத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் பக்தி கொண்டவர்களுக்கு, இந்த வரம் தானாகவே கிடைத்தது. ஆனால், சிலருக்கு இந்த வரமே சாபமாகவும் மாறியது. இதிகாசங்களிலும் புராணங்களிலும் குறிப்பிட்டுள்ளபடி எட்டு பேர் சாகா வரத்தை பெற்றுள்ளார்கள். அவர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

மகாபலி சக்கரவர்த்தி: மூன்று உலகத்தையும் ஆண்டவர், அசுர குலத்தைச் சேர்ந்த பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி ஆவார். ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையின் பொழுது, இவர் தம் நாட்டு மக்களைக் காண்பதற்காக வருவார் என்று கேரள தேசத்தின் நம்பிக்கை. இவருக்கு சாகா வரத்தை அளித்தவர் திருமால் ஆவார்.

வியாசர்: வியாசர், மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை கொடுத்த மிகப்பெரிய ஞானி ஆவார். ஞானம் மற்றும் அறிவாற்றலின் சின்னமான இவர், துவாபர யுகம் முடிந்து கலியுகத்திலும் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

அனுமன்: ஸ்ரீராமரின் தீவிர பக்தனான அனுமன், ராவணனுக்கு எதிராக ஸ்ரீராமர் நிகழ்த்திய போரில் பெரும் பங்கு கொண்டு வெற்றிக்குக் காரணமானவர். இவர் குருக்ஷேத்திர போரில் அர்ஜுனனின் ரதத்தில் இருந்தார். யுகங்கள் கடந்தும் இன்றும் இவர் வாழ்வதாக புராதன குறிப்புகள் கூறுகின்றன. இதற்குக் காரணம் ராமர் ஆஞ்சனேயருக்கு அளித்த வரமாகும்.

விபீஷணன்: இவர் ராவணனின் சகோதரன் ஆவார். ராமாயணப் போர் தொடங்கும் முன்னரே விபீஷணன் ஸ்ரீராமரிடம் சரணடைந்து விட்டார். ராவணன் ஸ்ரீராமரால் கொல்லப்பட்ட பிறகு இவர் இலங்கையின் அரசராக ராமனால் முடிசூட்டப்பட்டார். இவர் சாகாவரம் வாங்கவில்லை. ஆனால் மகாயுகம் முடியும் வரையான நீண்ட காலம் வாழும் வரத்தைப் பெற்றுள்ளார்.

கிருபாச்சாரியார்: இவர் சந்தனு மன்னனால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். போர்க் கலைகளையும், வேதங்களையும் கற்ற இவர், பின்னாளில் இளவரசர்களுக்கு குருவாக மாறினார். பாரதப் போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்த ஒரே ஒரு வீரர் இவர்தான். குரு வம்சத்தின் கடைசி வாரிசான அபிமன்யுவின் மகனான பரீக்ஷித்துக்கு போர்க் கலைகளை கற்றுக்கொடுத்தார். கிருபாச்சாரியாரின் சகோதரியைதான் குரு துரோணாச்சாரியார் மணந்தார்.

பரசுராமர்: மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர். இவர் அனைத்து போர் கலைகளுக்கும், வேதங்களுக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும் முன்னோடி. கல்கி புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, உலகம் அழியும் தருணத்தில் இவர் மீண்டும் வருவார். திருமாலின் அவதாரத்திற்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து, திவ்ய அஸ்திரங்களை பெற உதவி மனித குலத்தை காப்பாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்கண்டேயன்: சிவபெருமானின் தீவிர பக்தனான இவர் மரணமில்லா வாழ்வை பெற்றவர். சிவபெருமானும் எமதர்மனும் இவருக்கு இந்த வரத்தை வழங்கினர். மரணமில்லா வாழ்வு மட்டுமின்றி, என்றும் இளமையாக இருக்கும் வரத்தையும் இவர் பெற்றுள்ளார். பக்தர்களுக்காக சிவபெருமான் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு மார்க்கண்டேயனின் கதை சிறந்த உதாரணமாகும்.

அஸ்வத்தாமன்: அஸ்வத்தாமனுக்கு சிரஞ்சீவி வரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டது அல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம். பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு இந்த சாபத்தை அளிக்கப்பட்டது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அஸ்வத்தாமன். உத்திரையின் கருவிலிருந்த அபிமன்யுவின் குழந்தையின் மீதும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். மன்னிக்க முடியாத இந்தக் குற்றத்திற்காக கிருஷ்ணர், அவனிடமிருந்து மரணத்தை பறித்துக் கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT