வியட்நாம் என்றாலே நம் நினைவுக்கு வருவது, நீண்ட காலம் நடந்த போர்கள்.
கம்போடியா நாட்டின் உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர் வாட்’, ‘அங்கோர் தாம்’ போன்ற இடங்களைப் பார்த்த பின்னர், கம்போடியாவைப் பிரிய மனமின்றி வியட்நாம் கிளம்பினோம்.
சியாம்ரீப் நகரிலிருந்து வியட்ஜெட் விமானத்தில் சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் வியட்நாமின் ஹோசிமின் (Ho Chi Minh) நகரில் இறங்கினோம். விமான நிலையத்தில் நெரியும் கூட்டம். விசா ஆன் அரைவல் வாங்க அலைமோதிய கூட்டத்தில்., நீண்ட வரிசையில் நின்று, 30 நாட்கள் விசா பெற்றதும், செக்யூரிடி செக். பெல்ட், ஷூ எல்லாம் கழற்றி, மெடல் டிடெக்டர் சோதனை முடித்து, பெட்டிகளை கலெக்ட் செய்து, வெளியே வந்தால், மேக வெடிப்புபோல பெரும் மழை.
எங்களை வரவேற்ற வியட்நாம் கைடு வ்ராங் (Vrong), மழை நின்றதும் எங்களை நகரின் மையத்தில் இருந்த பே (Bay Hotel) ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். நகரின் மையத்தில், மிக பிசியான தெருவில் இருந்தது அந்த ஹோட்டல்.
வடக்கு தெற்கு என்று பிரிந்திருந்தபோது தெற்கு வியட்நாமின் தலைநகரமாக விளங்கிய சைகான் (Saigon) என்றழைக்கப்பட்ட இன்றைய ஹோசிமின், தெற்கு வியட்நாமின் பெரிய வணிக நகரம்,
போர் என்று சரித்திரத்தில் இடம் பெற்ற அந்த நீண்ட காலப்போர் பற்றி ஒரு சிறு விளக்கம்…
முதலில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது வியட்நாம்.
பின்னர், ஆசிய ஆப்ரிக்க நாடுகளைக் கைப்பற்ற பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையில் நடந்த போட்டியில் 18ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் வந்தது.
1954ல் வடக்கு வியட்நாம், பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்று, வியட்நாம் ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of Vietnam) என்றபெயரில் தனி நாடானது. பின்னர் தெற்கு, வடக்கு என வியட்நாம் பிரிந்தது.
வடக்கு வியட்நாமை ஆதரித்த அன்றைய சோவியத் ரஷ்யா சீனா போன்ற கம்யூனிச நாடுகள், ஆயுதங்களையும், போர் உத்திகளையும் கொடுத்து உதவின.
தெற்கு வியட்நாம், அமெரிக்காவுடன் சேர்ந்து வடக்கு வியட்நாமை எதிர்த்தது.
இது கம்யூனிசத்தை ஒடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாகவும் கருதப்பட்டது.
ஆனால், தெற்கு வியட்நாமில், வியட்காங் என்ற ஒரு படை, அங்கேயே கம்யூனிச எதிர்ப்பாளர்களைக் கொல்ல கொரில்லாப் போர்முறையைக் கையாண்டது. இதன் மூலம் நவீன போர் உத்திகளைக் கையாண்ட அமெரிக்காவை பின் வாங்க வைத்தனர். போர் 20 ஆண்டுகள் நீடித்தது. 1973இல் பாரீஸ் அமைதி ஒப்பந்தம் முடிவாயிற்று. அதே ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்கப்படைகள் முழுமையாகப் பின்வாங்கின.
அத்துடன் போர் முடிவுக்கு வந்ததும் அடுத்த ஆண்டில் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் ஒன்றிணைந்தது. இந்தப் போரில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும்,
11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டு போயினர். போர்க்காட்சிகளின் புகைப்படங்கள் உலகப் புகழ் பெற்றன.
வியட்நாம் போரின் நாயகனாக போற்றப் படுபவர் மறைந்த தலைவர் ஹோசிமின்.
(Ho Chi Minh) ஃபிரான்ஸிடமிருந்து வியட்னாமுக்கு விடுதலை வாங்கித் தந்ததோடு, அமெரிக்கப் படைகள் திரும்பிச் செல்லவும் காரணமாக இருந்தவர் என்பதால் மக்களிடையே பெரும் ஹீரோவாக போற்றப்படுகிறார்.
சைகான் என்ற நகரின் பெயரை ஹோசிமின் என்றும் மாற்றியுள்ளனர்.
அடுத்த நாள்,
“கொஞ்சம் திகிலான ஒரு சுரங்கப் பாதையைப் பார்க்கப் போகிறோம்” என்றார் வழிகாட்டி.
‘சுச்சி டனல்ஸ்’ (Cu Chi Tunnels ) என்ற இந்த சுரங்க பதுங்கு குழிகள்,
தென் வியட்நாமின் அடர்ந்த காடுகளில் பூமிக்கடியில் 250 கிலோமீட்டர் நீளம் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை. சைகானில் அமெரிக்கரை எதிர்த்த வியட்காங் போராளியினர் பதுங்கி வாழவும் அவர்களின் தகவல் தொடர்பு, மருத்துவம், உணவு, ஆயுதக் கிடங்குகள் இவற்றுக்கான இடமாகவும் இவை இருந்தன.
ஆனால், இந்த டனல்களில் வாழ்க்கை மிகக் கடினமாக இருந்தது. காற்று, உணவு, தண்ணீர் பற்றாக்குறை இவற்றோடு, எறும்புகள், விஷப் பூரான்கள், பாம்புகள், தேள், விஷ சிலந்திகள் பெருச்சாளிகளை சமாளிக்க வேண்டியிருந்தது. அநேக வீரர்கள் பதுங்கு குழிகளில் பகலில் வேலை அல்லது ஓய்வு என இருந்துவிட்டு இரவில் மட்டுமே வெளியே வந்து தங்களுக்குத் தேவையானதை சேகரிப்பார்கள் அல்லது போரில் ஈடுபடுவார்கள்.
அமெரிக்கரின் கடுமையான குண்டுவீச்சு சமயங்களில் பல நாட்கள் நிலத்தடியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுக்கு நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது, மலேரியா, பல வீரர்களின் இறப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தது.
இந்த டனல்கள் இன்று பார்வையாளர்களுக்கு காட்சிப் பொருளாகியிருக்கின்றன. முதலில் மேற்கூரையிட்ட, ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் ஒரு சற்று நீண்ட பாதையில் நடந்த பின் திறந்த வெளியில் டனல் பாதை துவங்குகிறது. அருவியாகக் கொட்டும் பெரு மழையில் காட்டுப் பகுதியில் சேறும் சகதியுமாக வழுக்குகிறது அந்தப் பாதை. சில குறிப்பிட்ட இடங்களில் டனலுக்குள் குனிந்து செல்ல அனுமதிக்கிறார்கள்.
டனல் மூன்று அடுக்குகளாக கீழே இறங்குகிறது. முதல் அடுக்கு பூமிக்குக் கீழே 3 அல்லது 4 மீட்டர் ஆழத்திலும், இரண்டாம் லெவல், ஐந்து முதல் ஏழு மீட்டர் ஆழத்திலும், மூன்றாவது அடுக்கு 8 மீட்டர் ஆழத்திலும் உள்ளது. டனலுக்குள் வீரர்களின் உருவச் சிலைகள் பல வேலைகளைச் செய்யும் நிலைகளில் மோட்டார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வெளியே வந்து செல்ல அமைக்கப்பட்ட சிறிய துவாரங்களின் மூடிகள், தரையோடு தரையாக அடையாளம் தெரியாதபடி இருக்கின்றன. அதேபோல்தான், எதிரிகள் வந்தால் அழிக்க என அமைக்கப்பட்ட பொறிகளும் புல் தரையோடு ஒன்றியிருக்கின்றன. அன்று அவர்கள் அமைத்ததெல்லாம் ஆர்வமாகப் பார்வைவையிட்டாலும், ஐம்பது வருடங்களுக்கு முன்பு அங்கே இருந்த வீரர்களின் திகிலான வாழ்க்கை இன்றும் அச்சமூட்டுகிறது.
கனமான நினைவுகளுடன் வெளியே வந்தவர்களை கலகலப்பாக்க வியட்நாம் சில்க் ஹவுஸ் அழைத்துச் சென்றார் வ்ராங். புகழ் பெற்ற பால் கலக்காத சூடான வியட்நாம் டீ தந்து வரவேற்றார்கள். தேங்காய்க்குப் பஞ்சமில்லாத அந்த நாட்டில் தேங்காய் ஓடுகளிலிருந்து ஃபைபர் தயாரித்து மிகவும் மிருதுவான துணிகளை நெய்து விற்பனை செய்யும் இடம் அது. கசங்கவே கசங்காத, மிருதுவான துவளும் டவல்கள், படுக்கை விரிப்புக்கள், பைகள், சாக்ஸ்கள், ஷர்ட்கள், விளையாட்டு வீரர்களுக்கான உடைகள் என்று குவித்திருக்கிறார்கள். விற்பனையும் அமோகம். ஷர்ட்கள், விரிப்புக்கள் என்று வாங்கிக்கொண்டோம்.
அடுத்து நாங்கள் சென்ற இடம் வியட்நாம் போர் நினைவு மியூஸியம். (War Remnants Museum). விரிந்து கிடக்கும் பல அறைகளுக்குள், போர்க் கைதிகளைச் சித்திரவதை செய்யும் பல வித கருவிகள், கைகளையும் கால்களையும் கட்டிப்போட்ட வளையங்கள், கில்லாட்டின் போன்ற கொலைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கொடுமைக் காட்சிகள் புகைப்படங்களாகவும் நிறைந்திருக்கின்றன.
1972 ல் குண்டு வீசப்பட்டபோது மக்கள் சந்திக்க நேர்ந்த அவலங்கள், கைதிகளின் கடைசி நிமிடங்கள், கும்பலாக மனித உடல்கள்… தெருவில் அழுதபடி ஓடிவரும் குழந்தைகள்… இவற்றைப் பார்க்க திடமான மனசு தேவை.
வெளியே திறந்த வெளியில், போரில் வியட்நாம் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள், பீரங்கிகள், குண்டு வீசிய விமானம் என்று காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த மியூசியத்தின் நோக்கமே, இனிமேல் போர் வேண்டாம் என்பதுதான்.
வெளியே வந்தால் விடாமல் மழை. போர்களை மீறி, நாட்டின் வளர்ச்சியும், பழமை மாறாத கலாசாரமும் வியக்க வைக்கிறது. பெரிய சர்ச், புத்தர் கோயில்களும் கண்ணில்படும் நகரில், இந்துக் கோயில்களும் உண்டு என்று ஆச்சரியப்பட வைக்கிறார். கைடு..
(வியட்நாம் பயணத்தொடர் – பகுதி -2, வரும் 11.01.2024 அன்று... தொடர்ந்து பயணிப்போம்.)