Lord Muruga 
தீபம்

வேண்டியதை அருளும் முருகனின் 21 நாள் விரதம்!

ம.வசந்தி

முருகனுக்கு 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். 48 நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து அதற்கு இணையான பலனை பெறலாம்.

21 நாள் என்பது கேதார கௌரி நோன்புக்காக அம்பாள்  சிவபெருமானிடம் வரம்பெற வேண்டும் என்பதற்காகவும், தன்னில் சரிபாதியாக இறைவன் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதற்க்காக கேதாரம் என்ற திருத்தலத்தில் 21 நாள்கள் எண்ணிக்கையை தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதால், இறைவனிடம் வரம் பெற்று அவளுக்கு வேண்டிய பலன் கிடைக்கப் பெற்றாள்

எண்களின் ஆதிக்கத்தில் 21 என்ற எண் சிறப்புக்குரியது. எண்கணிதத்தின்படி 2 என்ற எண் சந்திரனோடும், 1 என்ற எண் சூரியனோடும் தொடர்புடையது. 3 என்ற எண் குரு என்ற கிரகத்தோடு தொடர்புடையது. 3 குருவின் ஆதிக்கம்நிறைந்தது.

இவற்றில் 2 என்ற எண் முன்னாலும், 1 என்ற எண் பின்னால் வருவது நம் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துவதாகும். சந்திரன் எப்படி தேய்ந்து வளர்கிறாரோ அதுபோல நிறைய பேருக்கு வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி என்பது இருக்காது.

அதனால்தான் சூரியன் போன்ற ஒளிமயமான மற்றும் பிரகாசமான வாழ்வு வேண்டும் என்று நினைப்பவர்கள்  21 நாள் விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட  நாம் நினைத்ததை எம்பெருமான் நிறைவேற்றுவார்.

2ஐயும், 1ஐயும் கூட்டினால் 3. இதற்குரிய கடவுள் குருபகவான். அவரது அருளும் நமக்குக் கிடைத்தால் நாம் என்ன நினைத்துள்ளோமோ அதற்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பொதுவாக திருமணம் குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள் 21 நாள் விரதத்தை கையில் எடுத்து வேண்டியது கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களால் கண்டிப்பாக இருக்கக்கூடிய விரதம்தான் இந்த 21 நாள். எந்தக் கிழமையிலும் ஆரம்பிக்கலாம். சஷ்டி திதியில் ஆரம்பிப்பது விசேஷம். விசாகம், பூசம், கார்த்திகை நட்சத்திரத்தில் என முருகனோடு தொடர்புடைய நாள்களில் விரதத்தை ஆரம்பிக்கலாம். வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.

காப்பு கட்டுவது அவரவர் சௌகரியத்தைப் பொருத்தது. அழகான முருகனின் திருவுருவப்படத்தை எடுத்து அர்ச்சனைக்கு அரளி, மஞ்சள் நிற மலர்கள் எடுத்துக் கொண்டு ஒருவேளை விரதம் இருக்கலாம்.

விரதகாலத்தில் காலை, மாலை 2 வேளையும் குளித்துவிட்டு நெய் தீபம் ஏற்றி வேல் மாறலைப் பாராயணம் செய்து முருகனை நினைத்து மனமுருக வழிபட வேண்டும்.

பில்லி, ஏவல், சூன்யம், செய்வினை இருக்கு என்று நினைத்து கஷ்டப்படுபவர்கள் "நாள் என் செய்யும்" என்று தொடங்கும் அருணகிரி நாதரின் பாடலைப் பாராயணம் செய்யலாம். எளிமையாக சுவாமிக்கு பால், தேன் கலந்து நைவேத்தியம் செய்வது சிறப்பு காலையில் இப்படி வழிபட்டு அதேபோல மாலையிலும் வழிபட்டு பூஜை முடிந்ததும் நைவேத்தியத்தை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இப்படி 21 நாள் விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயமாக நாம் வேண்டியதை முருகப்பெருமான் நிறைவேற்றுவார். இறுதிநாளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடலாம். நம்பிக்கையோடு இருந்து வழிபட்டால் உங்களுக்குரிய பலனை முருகப்பெருமான் நிச்சயம் தருவார்.

நிலவின் வெப்பநிலை சரிந்தது எப்படி தெரியுமா?

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

தீபாவளி ஸ்பெஷல் பட்டர் முறுக்கு செய்யலாம் வாங்க! 

படிக்கும்போது தூக்கம் வருகிறதா? அப்போ இவற்றை செய்யுங்கள்!

SCROLL FOR NEXT