Shiva Vishnu Temple in Germany 
தீபம்

ஜெர்மனியில் ஒரு சிவா-விஷ்ணு கோயில்!

மரிய சாரா

ரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக விளங்குகிறது ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் அமைந்திருக்கும் சிவா விஷ்ணு ஆலயம். 1986ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலின் பிரதான வழிபடு மூர்த்தங்களாக, சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் விளங்குகின்றனர்.

1970களில், ஜெர்மனிக்கு பணி நிமித்தமாகச் சென்ற இந்தியர்கள், தங்களின் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும், சமூகமாக தாங்கள் ஒன்றிணையவும் ஓர் அமைப்பையும் இடத்தையும் உருவாக்க விரும்பினர். அதைத் தொடர்ந்து, 1982ம் ஆண்டு, சிவா விஷ்ணு கோயில் ஒன்றை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டு, அதற்கான கட்டுமானத்திற்கான அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டது. தொடர்ந்து, 1986 ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இக்கோயில் இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலிருந்து பணி நிமித்தமாக வந்த தமிழர்களின் பெரும்பான்மையான பங்களிப்பால் உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் தென்னிந்திய கட்டடக்கலை பாணியை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் மிகவும் அழகான பளிங்குகல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள கலைநயங்கள் காண்பவருக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றன.

ஆலயத்தின் வாயிலில் உயரமான கோபுரம் காட்சி தருகிறது. கோவிலின் மையப்பகுதியில் கருவறை அமைந்துள்ளது. அதில் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணு ஆகியோரின் சிலா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிவபெருமான் சன்னிதியில் நந்தி, முத்துமாரி அம்மன் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. மகாவிஷ்ணு சன்னிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் மற்றும் கருடாழ்வார் ஆகியோர் கட்சி தருகின்றனர். இவை மட்டுமின்றி, கோயிலைச் சுற்றி, இன்னும் பல தெய்வ மூர்த்தங்களுக்கும் சிறு சிறு சன்னிதிகள் அமைந்துள்ளன.

இக்கோயிலில் சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை தீபம், விவாஹ பஞ்சமி போன்ற பல பண்டிகைகள் சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றன. இந்த விழாக்களில் பஜனை, கீர்த்தனைகள் மற்றும் பூஜைகள் மிகவும் விசேஷமாக நடைபெறுகின்றன. அதேபோல், தினசரி சுவாமி தரிசன நேரங்களில் நித்ய அபிஷேகம், தீபாராதனை மற்றும் ஹோமங்களும் நடைபெறுகின்றன.

இக்கோயில் அறக்கட்டளை மேற்கண்ட ஆன்மிக சேவைகளில் மட்டுமின்றி, பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. தமிழ் பள்ளி, பாரம்பரிய நடனம், இசை வகுப்புகள் மற்றும் யோகா போன்றவற்றுக்கு இக்கோயில் ஒரு மையமாக விளங்குகிறது. இதனால், ஜெர்மனியில் வாழும் தமிழ் குழந்தைகள் தங்களின் பாரம்பரிய கலாசாரத்தைக் கற்கவும், அது பற்றி அறியவும் பெரும் வாய்ப்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சிவா விஷ்ணு கோயில் ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான சமூக மையமாக விளங்குகிறது. இந்து மத நம்பிக்கைகளை கற்றுக்கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு இந்திய பண்பாட்டு மரபுகளை நகர்த்துவதற்கும் இக்கோயில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

இக்கோயில் நிர்வாகம், தன்னார்வ குழு மூலம் நடத்தப்படுகிறது. இக்குழு பொதுமக்களிடம் நன்கொடை திரட்டுதல், விழாக்கள் நடத்துதல், சன்மார்க்க கற்பிப்புகளை முன்னேற்றுதல் போன்ற பல செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் நடைபெறும் கூட்டத்தில், கோயிலின் வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இக்கோயில் தினமும் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்படுகிறது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோயிலின் கட்டடக்கலையையும், அமைதியான சூழலையும் அனுபவிக்கலாம். கோயிலின் பல்வேறு சன்னிதிகளையும் தரிசிக்கலாம். அது மட்டுமின்றி, இந்து மத நம்பிக்கைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ளலாம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT