சிரசாசனம் செய்யும் சிவபெருமானா? எங்கே தெரியுமா?

சிவபெருமான்...
சிவபெருமான்...
Published on

சிவன் தலைகீழாய் நின்று சிரசாசனத்தில் காட்சி தரும் கோவில் ஆந்திர மாநிலத்தில் பீமாவரம் அருகிலுள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் சிறப்புகளை இயம்புகிறது இப்பதிவு.

உலகத்தை காத்து ரட்சிக்கும் பரம்பொருளாகிய ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான், பல்வேறு கோலங்களைப் பூண்டு காட்சி தந்துள்ளார். அதிசயிக்கும் வண்ணம் இப்படி உலகில் வேறு எங்குமே காண முடியாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தருவது இங்கு மட்டுமே.

முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடுந்தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். தன் வரத்தைக் கொண்டு அனைத்து தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் யமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான். யமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க, யமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் யமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் யமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசாசனத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது நின்றார் யமன். யமனின் வேதனையறிந்த அன்னை பார்வதி அங்கு காட்சி அளித்தார். யமனுக்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். யமனும் சம்பாசுரனை கொன்று தேவர்கள் குறையை தீர்த்தார். பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும் குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவேதான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். சிரசை பூமியில் பதித்து பாதத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். இது அதிசயத்திலும் அதிசய காட்சியாக இன்றளவும் உள்ளது. அருகிலேயே வேறு எங்கும் காண இயலா வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக்கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சியளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
சிவபெருமான்...

ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒருசேர தரிசித்துச் செல்ல, யம பயம் நீங்கும். நவகிரகங்களால் ஏற்படும் பிரச்னைகள், திருமணத்தடை, குழந்தையின்மை என்று அனைத்தையும் நீக்கி அருள் வழங்குகின்றனர் பார்வதி தேவியும் சக்தீஸ்வர சுவாமியும். இந்த தலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

யனமதுரு ஸ்ரீ பார்வதி சமேத சக்தீஸ்வரர் திருக்கோவில் ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் யனமதுரு கிராமத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com