தீபம்

பிறை தரிசனப் பலன்!

ஆர்.சுந்தரராஜன்

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர் மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடைந்த கரையை அடைத்தார்கள். மதுரை மாநகரில் பிட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள். அவளது உண்மையான அன்புக்கு செவி சாய்த்த இறைவன், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்குக்கு வேலை செய்தார் என்பது திருவிளையாடற் புராணம் கூறும் செய்தியாகும்.

’வந்திக் கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வர வேண்டுமா? ஈசன் தன்னிடம் உள்ள பூத கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே கூலி ஆளாக வரும் அளவுக்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன?’ என்பது பலருக்கும் மனதில் உதிக்கும் கேள்வியாக இருக்கும்.

திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர், ’திங்கள் ஆயிரம் தொழுதாள்’ என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம்தான் வந்திக் கிழவி பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையை தரிசித்து வணங்குவது என்பது மிக மேலான சிவ புண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடி மேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம். அதனால், பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தைப் பெறலாம் என்பது ஐதீகம். அந்த வகையில்…

*மூன்று பிறையை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

*நான்கு பிறையை தொடர்ந்து தரிசித்தால் நம் வினை நாசமாகும்.

*ஐந்து பிறையை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரச யோகம் பெறுவான்.

*ஆறு பிறையை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

*ஏழு பிறையை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன்கள் யாவும் தீரும்.

*பத்து பிறையை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

*வருடம் முழுவதும் பிறையை தொடர்ந்து தரிசிக்க, வம்ச விருத்தியாகும்.

நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு (முத்திப் பேறு) தரும். இதனை நன்கு உணர்ந்தவர்கள் பிறை தரிசனம் கண்டு பிறவா பேறு பெறலாம்.

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்!

தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி செய்யலாம் வாங்க!

481 அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்டம்!

மின்சார வாகனங்களின் இருண்ட பக்கம்! 

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

SCROLL FOR NEXT