தீபம்

விநாயகரின் ஆறுபடை வீடுகள்!

கல்கி டெஸ்க்

முதல்படை வீடு - திருவண்ணாமலை

இங்குள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாகர்’. இவரைக் குறித்தும் போற்றிப் பாடப்படும் பாடலே ‘அல்லல் போம், வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் என்பதாகும்.

இரண்டாம் படை வீடு - விருத்தாசலம்

இங்குள்ள அருள்மிகு விருத்தக்ரீஸ்வரர் ஆயைத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு ‘ஆழத்துப் பிள்ளையார்’ என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னிதி கொண்டுள்ளார். இறங்கிச் சென்று வழிபடப் படிக்கட்டுகள் உள்ளன. இவரைத் துதித்தால் செல்வம், கல்வி, சீரான வாழ்வு அமையும்.

மூன்றாவது படை வீடு - திருக்கடவூர்

அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு 'கள்ள வாரணப் பிள்ளையார்’ என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்னி வழங்குபவராக விளங்குகிறார். அபிராமி பட்டர் ‘அபிராமி அந்தாதி'யின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான் 'தாரமர் கொன்றையும் செண்பக மாலையும்’ என்று தொடங்குகிறது அப் பாடல்.

நான்காவது படை வீடு - மதுரை

மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி அம்மையைத் தரிசிக்கச் செல்லும் வழியில் 'சித்தி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்ததி பெரிது. மாணிக்க வாசகர் பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரை தரிசித்துச் சென்றதாகத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படை வீடு - காசி மற்றும் பிள்ளையார்பட்டி

காசியில் ‘துண்டி ராஜ கணபதி’யாகவும் பிள்ளையார்பட்டியில் ‘கற்பக விநாயகர்’ ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார்கள். காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார். காசிக்குப் போக முடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகின்றார். இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.

ஆறாம்படை வீடு - திருநாரையூர்

இங்கு ‘பொள்ளாப் பிள்ளையார்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிற்பியின் உளியால் பொள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் இத்திரு நாமம் இந்திருத் தலத்தில்தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்பியாண்டார் நம்பிகளும் அவதரித்தார். கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பலன்களைப் பெறுவோமாக!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT