ஃபெஸ்டம்பர்-இன் 50வது ஆண்டு விழா உற்சாகமாகத் துவங்கியது. என்ஐடி திருச்சி இயக்குநர் திருமதி ஜி. அகிலா, ஃபெஸ்டம்பர்-இன் தொடக்கக் குழுவைச் சேர்ந்த திரு. குருமூர்த்தி கல்யாணராம் மற்றும் சிறப்பு விருந்தினர் திரு. எஸ்.செல்வகுமார், துணை கமிஷனர் (சமூகநலம் மற்றும் ஒழுங்கு), திருச்சி நகரம், ஆகியோர் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஃபெஸ்டம்பர்-இன் தொடக்க நாட்கள், இப்போது வரை அது பெற்ற முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அது அடையக்கூடிய உயரங்களை நம் நினைவுகளுக்கு எடுத்துக்கூறினார்கள். அடுத்த நாட்களின் சுறுசுறுப்பையும் வியப்பையும் துவங்கியவாறு, அந்த நாளை நமது இசை மற்றும் நடன குழு அளித்த உற்சாகமான நிகழ்ச்சி நிறைவு செய்தது.
முதல் நாள் காலையில் நடைபெற்ற இலக்கணம் மற்றும் இலக்கியம் சார்ந்த வினாடி வினா நிகழ்ச்சியானது, மற்ற நிகழ்வுகளுக்கு ஓர் முன்னுதாரணமாக அமைந்தது. இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி போட்டியின் களத்தைச் சூடுபடுத்தினர். ஓவிய ஆர்வலர்கள் கல்லூரியில் உள்ள சுவற்றில் தங்கள் வண்ணங்களைத் தீட்டினர். புகைப்பட ஆர்வலர்கள்லோ சுவற்றில் தீட்டிய ஓவியங்களை புகைப்படம் எடுத்தனர். நாடக நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள், கற்பனையான கதைகளின் இனிமையான நறுமணத்தை திறமையுடன் பரப்பினர். கணினி விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றவர்கள், தங்களால் இயன்றளவு போராடி, தங்களின் கற்பனை உலகத்தின் ஆட்சிப் பகுதிகளையும் கோட்டையையும் தன்வசம் வைத்துக் கொண்டனர். டிஜே ஹோலி ஸி தொகுத்து வழங்கிய கண்கவர் 'இ டி யெம் நைட்', நம் இரவை தாளங்களால் நிரப்பி முடிவடையச் செய்தது.
இரண்டாம் நாளில் முந்தைய தின போட்டிகள் மட்டுமின்றி, மேஜரின் கோல்டன் ஜூபிலி வினாடி வினா போன்ற புதிய நிகழ்வுகளுடன் உயிர்பெற்றது.
தஞ்சாவூர் ஓவியம், வாசனைத் திரவியம் தயாரித்தல், நகைகள் உருவாக்குதல் ஆகியவற்றைக் கொண்ட பயிலரங்குகள் மூன்று நாட்களுக்கு அனைவரின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்தது.
பிரபலங்கள் கவுரி கிஷன், மாரி செல்வராஜ், வைசா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் வேட்டையன் திரைப்படக் குழுவின் சிறப்புப் விருந்தினர் விரிவுரைகள், மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அனுபவக் கதைகளை அள்ளித்தந்தன. இறுதியில், 'தி லாஸ்ட் ஃபயர் ஃப்லைஸ்' குழுவின் மெய்சிலிர்க்கவைக்கும் இசைக்கச்சேரியான 'ஃப்யூஷன் நைட்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
போட்டிகள் முடியக் கடைசியாக இரண்டு தினங்கள் மட்டும் இருந்த நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய திறமையை வெளிக்காட்டினர். திரு மற்றும் திருமதி ஃபெஸ்டம்பர் முடிசூட்டப்பட்டு, கொரியோனைட் மற்றும் கிகாஹெர்ட்ஸ் போன்ற முக்கியமான போட்டிகளின் வெற்றியாளர்கள் பரிசளிப்பு விழாவின்போது அறிவிக்கப்பட்டனர்.
பார்ன் ஹால் முதல் சீஸாட் மைதானம் வரை, உணவு கடைகள் பளிச்சிடும் மின்விளக்குகளால் சூழப்பட்டு பார்வையாளர்களை ஈர்த்தது. இந்தாண்டு பெஸ்டெம்பர்-இன் பொன்விழாவைச் சிறப்பாக நடத்திய குழுக்களின் சந்தோஷம் காற்றெங்கும் பரவியது. உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் வெவ்வேறு நிறங்களால் என்ஐடி திருச்சி வண்ணமயமாகக் காட்சியளித்தது.
பாடகர் கார்த்திக் அவர்களின் அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவுக்கு வந்தது நினைவில் நீங்காத இடம் பெற்ற தென்னகத்தின் மிகப்பெரிய கலைவிழாவின் ஐம்பதாவது பதிப்பு 'தி டெக்கன் ஒடிசி'.
ஒவ்வொரு பதிப்பிலும், ஃபெஸ்டம்பர், நாட்டின் முன்னணி கலைவிழாக்களில் ஒன்றாகத் தனது நற்பெயரை உயர்த்தி வருகிறது. மேலும் இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்காக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கல்கி ஆன்லைன்' ஃபெஸ்டம்பரின் அதிகாரப்பூர்வ 'இ-தமிழ் இதழ்' ஆகும். இது உயர்தனி செம்மொழியில் பங்குதாரராக செயல்பட்டது என்பது குறிப்பிடதக்கது.