ஏடாகூடம் என்றால் என்னவென்று கேட்டால் உடனே நாம் ஒழுங்கின்மை (not in order), முறைகேடு, குளறுபடி என்று அச்சொல்லிற்கு பொருள் விளக்கம் தருவோம். ஆனால், உண்மையில் ஏடாகூடம் என்பது ஒரு புதிர் விளையாட்டுக் கருவியின் பெயர் இது என்பது நம்மில் பலருக்கு தெரியாது!
இக்கால ரூபிக்ஸ் கியூப் போல கைக்குள் அடங்கும் அளவுகளில் - மரக்கட்டைகளால் செய்யப்பட்ட ஒரு விளையாட்டுக் கருவி. மூளைக்கு வேலை கொடுத்து வலிமையாக்கும் ஒரு எளிய விளையாட்டுக் கருவியான இதனை ஆங்கிலத்தில் Burr puzzle என்று சொல்வர்.
பல்வேறு எண்ணிக்கையில் கட்டைகள் கொண்ட பல வகையான வடிவத்தில் ஏடாகூடங்கள் உண்டு. மரக்கட்டைகளால் ஆன ஒரு தொகுப்பை பகுப்பாய்வு மற்றும் கணிதத் திறன்களைப் பயன்படுத்தினால் மட்டுமே ஒழுங்கான உரிய உருவத்தை உருவாக்கிக் கொண்டு வரமுடியும்.
ஒவ்வொரு கட்டைகளையும் அதன் உரிய வெட்டுகளில் வைத்து ஒன்று சேர்ப்பது மிகவும் கடினமானது. அதுபோல சேர்த்தவற்றை பிரிப்பதும் மிகவும் கடினம். அதன் வடிவங்கள் நம்மைக் குழப்பும் வகையில் இருப்பதால். அதற்குரிய ஆப்பை கண்டுபிடித்தால் பிரிப்பது எளிது. எனவேதான் ஏடாகூடம் என பெயர் பெற்றது.
இன்றைக்கும் கேரளாவில் மக்கள் பலவிதமான ஏடா கூடங்களை பெருமளவில் பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.
இன்று ஏடாகூடம், ஏடாகுடம் என்று அழைக்கப்பட்டாலும், இதன் சரியான பெயர் 'ஏடாகோடம்' ஆகும். ஏழு என்ற எண்ணிக்கையில் அமைந்த கட்டைகளை கோர்த்து செய்வதால் ஏடாகோடம் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
ஊரா குருக்கு (அவிழ்க்க முடியாத முடிச்சு) எனவும் இதற்குப் பெயர் உண்டு.