சிவபெருமான்...
சிவபெருமான்... 
கல்கி

சிவபெருமானைப் போற்றும் ‘நமசிவாய’ என்ற மந்திரச் சொல்லின் பொருள் என்ன?

இரவிசிவன்

"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே".

நமசிவாய -  எனும் திருவைந்தெழுத்து சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாகும்.

நமச்சிவாய, சிவாயநம என இரண்டு வடிவங்களில் போற்றப்பட்டாலும் இதன் சரியான பொருள் நம்மில் பலர் அறியாதது!

வாருங்கள்... விளங்கிக் கொள்வோம்!

வடமொழியில் ' நம: ' என்று எழுதப்பட்டு
நமஹ - என உச்சரிக்கப்படும் இச்சொல்லின் மூலம் தமிழ் மொழி ஆகும்.

”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே” - என நம்மாழ்வார் அளித்த திருவாய்மொழியில் இடம்பெற்ற இப்பாடலில் ’நமன்று எழும்’ என்பது ’வணங்கி யெழும்’ என்ற பொருள் குறித்ததாகும்.

நமல் > நமன்று என்றால் 'வணங்கி' என்பது பொருள்.
நமல் > நமல்தல் > நமலுதல் = வணங்குதல், தொழுதல்.
நமல்க/ நமலுக = வணங்குக , போற்றுக (போற்றி).
நமல் = வணக்கம்.

நமர்த்தல் /நமுத்தல் = குழைதல், உடலை வளைத்து வணங்குதல், கை கூப்பி தொழுகை செய்தல்.
நமக்கரித்தல் = வணங்குதல்,
ஒரு தெய்வத்திற்கான பயபக்தியின் முறையான வெளிப்பாட்டை உருவாக்கும் வழிபாடுகள், செயல்கள் / சடங்குகள்.

நமகம் = வழிபாட்டுக்குரிய மந்திரங்கள்.
நமசிதன் = வழிபடத்தக்கவன்.
நமதன் = ஆண்டவன்.
திருவரங்கத்துத் திருமாலை – ’நம்பெருமாள்’ என்றழைப்பதையும் இலக்கியங்களில் காணலாம்.

நமல்க - என்ற தூய தமிழ்ச்சொல்லே பேச்சுவழக்கில் 'நமக' என்றாகி வடமொழி சென்று நம: ஆனது.

நமல்க > நமக > நம:
நமஹ, நமகம், நமஸ்கார், நமஸ்தே - ஆகிய அனைத்தும் நம் தமிழ் வேரிலிருந்து கிளைத்த சொற்களே!
இஸ்லாமியர் தொழுகை செய்தலை நமாஸ் என்றழைக்கப்படுதலையும் நோக்குக!.

நம > நமக்கரித்தல் > நமக்காரம் > நமஸ்கார்!

அடுத்து, ஆய - என்ற சொல் ஆகுதல், ஆகும் செயலைக்குறிக்கும். ஆயனென்ற பெயர்ச் சொல் 'ஆய' என்றாகும்.

உதா:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

இதன் அடிப்படையில் நம + சிவ + ஆய = நமசிவாய என்றால்  'சிவனாகிய நின்னை வணங்குகிறேன் ' - என்பதே பொருள்!

கடைக்குறிப்பு :
நமர்த்தல், நமைச்சல், நமட்டுச் சிரிப்பு ஆகிய சொற்களும்… இதனடி தோன்றியவேயே!

நமசம் = இணக்கம்.
நமக்காரி = தொட்டாற்சிணுங்கி செடி.
நமர்த்தல் /நமுத்தல் = குழைதல், உடலை வளைத்து வணங்குதல், கை கூப்பி தொழுகை செய்தல்.
நமுகுதல் = கடின நிலையிலிருந்து நெகிழ் நிலைக்கு மாறுதல், இளகுதல்.(To become damp, moise ).அப்பளம் நமுத்துவிட்டது எனச் சொல்வதை நோக்குக!

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT