மகளிர் சிறைவாசிகள் பயிற்சியின்போது...
மகளிர் சிறைவாசிகள் பயிற்சியின்போது... 
மங்கையர் மலர்

மகளிர் சிறைவாசிகளுக்கு விரியுது புதிய பாதை!

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

மிழ்நாடு சிறைத்துறை அனுமதியுடன், மத்திய சிறை மகளிர் சிறைவாசிகளுக்குக் கடந்த மூன்றாண்டுகளாக கைத்தொழில் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வருகிறது விஜயகீதம் அறக்கட்டளை. அது சென்னை செங்குன்றத்தில் இயங்கி வருகிறது.

அதன் நிறுவனராகவும் ஒருங்கிணைப்புச் செயற்பாட்டாள ராகவும் இயங்கி வருகிறார் கீதா ஓம் சரவணன். அவருக்கு எவ்விதம் இந்தச் சிந்தனை உதயம் ஆயிற்று? அவரது உயரிய பணிகள் என்னென்ன? சந்திப்போமா இவரை? :

கீதா ஓம் சரவணன்

“என் அப்பா விஜயன், கடந்த 2௦2௦ல் கொரோனா காலத்தில் இயற்கை எய்திவிட்டார். என் அப்பாவுக்கு என் மீது பாசம் அதிகம். அவரது மரணம் என்னை மிகவும் வருத்தியது. தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அப்போதுதான் அவர் நினைவாக சமூக நலன் சார்ந்து ஒரு அறக்கட்டளைத் தொடங்க வேண்டும் என்று தோன்றியது. சரி. அப்படி தொடங்கினால் யாருக்காக எவ்வாறு செயல்படுவது என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்போதுதான் மத்திய சிறைகளில் உள்ள தண்டனைக் கால மகளிர் சிறைவாசிகள் என் மனதுக்குள் வந்து போயினர்.

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனைக் கால மகளிர் சிறைவாசிகளுக்கு எம்பிராய்டரி, ஆரி ஒர்க், அழகுக் கலை பயிற்சி ஆகியன முறைப்படி கற்றுத் தந்துள்ளோம். மெழுகுவர்த்தி தயாரித்தல், கொசுவத்தி தயாரித்தல் உட்பட பயிற்சி தந்துள்ளோம். அதில் எழுபது பெண்கள் எம்பிராய்டரி மற்றும் ஆரி ஒர்க் தேர்ச்சி பெற்று, சிறை வளாகத்தின் உள்ளேயே அதன் வேலைப் பாடுகளிலும் இயங்கி வருகின்றனர்.

மகளிர் சிறைவாசிகளுக்குக் கைத்திறன் தொழில் மேம்பாட்டு பயிற்சிகள் தந்தால் மட்டும் போதுமா? அவர்களுக்காக வெளியிலே எம்பிராய்டரி, ஆரி ஒர்க் ஆர்டர்கள் பெற்றும் தருகிறோம். மகளிர் சிறைவாசிகள் அந்த ஒர்க் ஆர்டர்  வேலைகளை நிறைவு செய்து தருகின்றனர். அவர்கள் பணி முடித்துத் தரும் ஆர்டர்களுக்கு உரிய கூலித் தொகையினை, சிறை நிர்வாகம் அவரவர் பெயர்களில் தனியாகச் சேமித்து வைத்து வருகிறது.

அழகுக் கலை பயிற்சி

சென்னை புழல் சிறையில் மகளிர் சிறைவாசிகள் எண்பது பேருக்கு, அழகுக் கலை பயிற்சி தந்துள்ளோம். மேலும், வேலூர் சிறப்பு மகளிர் சிறையில் நாற்பது பெண்களுக்கு அழகுக் கலை பயிற்சி தந்துள்ளோம். அந்தச் சிறை வளாகத்தின் அவுட் போஸ்ட்டில், பயிற்சி பெற்ற மகளிர் சிறைவாசிகளைக்கொண்டு அழகுக் கலை நிலையம் ஒன்றும் இயங்கி வருகிறது. அந்த அழகுக் கலை நிலையம் ஆனது சிறைக் காவலர்களின் கண்காணிப்பிலும், வேலூர் மத்திய சிறை நிர்வாகத்தின் முழுக் கட்டுப்பாட்டிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

அழகுக் கலை பயிற்சி பெற்றவர்களில் தண்டனைக் காலம் முடிந்து வெளியே சென்றவர்களில், ஒரு சில பெண்கள் சென்னையில் அழகுக் கலை நிலையங்களில் மாதச் சம்பளம் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

பொதுவாக, மத்திய சிறைகளில் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வருகின்ற மகளிர்க்கு, அடுத்து என்ன செய்வது என்பது பெரிய கேள்விக்குறியாக எழுந்து நிற்கும். அதனால் அவர்களின் துயர்களைக் களையும் பொருட்டு, அவர்களின் தண்டனைக் காலத்தில் சிறைக்கு உள்ளேயே அவர்களுக்குச் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் தந்து, சிறையிலிருந்து அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து வெளியேறும்போது அவர்களின் வருவாய்க்கான புதிய பாதையினை அமைத்துத் தருகிறது எங்களின் விஜயகீதம் அறக்கட்டளை.

சிறை நிர்வாகம் ...

சமீபத்தில் வேலூர் சிறப்பு மகளிர் சிறையில் இருந்து தண்டனைக் காலம் நிறைவு பெற்று, வெளி உலகுக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலெட்சுமி அவர்கள் முன்னிலையில், தையல் மிஷின் மற்றும் உபகரணங்கள் வழங்கி உள்ளோம்.”

சென்னை செங்குன்றம் விஜயகீதம் அறக்கட்டளையின் நிறுவனர் கீதா ஓம் சரவணனின் நற்பணிகள் மேலும் சிறப்புற வாழ்த்துகள்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

SCROLL FOR NEXT