செய்திகள்

500 நாட்கள் குகையில் தனியாக இருந்த பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு.

கிரி கணபதி

ஸ்பெயின் நாட்டில் ஒரு ஆய்வுக்காக 500 நாட்கள் வெளியுலகத் தொடர்பின்றி தனியாக இருந்திருக்கிறார் ஒரு தடகள வீராங்கனை. 

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 50 வயதான 'பியாட்ரிஸ் பிளாமினி' என்ற தடகள வீராங்கனை 500 நாட்கள் ஒரு குகையில் தனியாக தங்கி விட்டு, வெளியே வந்ததையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. 2021 நவம்பர் 20-ல் ஸ்பெயின் நாட்டிலுள்ள கிரானாட மலைப்பகுதியில், சுமார் 230 அடி ஆழத்தில் அமைந்துள்ள குகைக்குள் ஒரு ஆய்வுக்காக இவர் சென்றார். இரண்டு கேமரா, 60 புத்தகங்கள், ஆயிரம் லிட்டர் தண்ணீருடன் குகைக்குள் சென்ற இந்த பெண்மணி, 500 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தார். குகைக்குள் அவர் எப்படி வாழ்ந்தார், எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதை அவரின் ஒவ்வொரு அசைவையும் வைத்து, ஆராய்ச்சியாளர்களும் உளவியலாளர்களும் கேமரா வழியாக கண்காணித்து வந்தனர். 

அவர் குகைக்குள் தங்கியிருந்த 500 நாட்களும், ஓவியம் வரைதல், கம்பளி பின்னுதல் மற்றும் உடலை வலுடன் வைத்திருக்க உடற்பயிற்சிகள் என நேரத்தைக் கழித்துள்ளார். சமீபத்தில்தான் அவர் குகையை விட்டு வெளியே வந்த நிலையில், அவருக்கு பொதுமக்களும் விஞ்ஞானிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். "குகைகள் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் சூரிய வெளிச்சம் நமது மூளையின் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியம் என்பதை அங்கு இருளில் இருந்தபோது உணர்ந்தேன். அங்கே நேரம் எப்படி சென்றது என்றே எனக்குத் தெரியவில்லை. இது எனக்கு என் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவம்" என தனது சாகச அனுபவம் குறித்து பிளாமினி கூறினார்.

கடந்த 2010ல் தென் அமெரிக்காவில் உள்ள சிலியில், சான் ஜோன்ஸ் என்ற தங்கச் சுரங்கம் இடிந்ததில், அதில் பணியாற்றிய 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுமார் 2,257 அடி ஆழத்தில் தனியாக இருந்திருக்கிறார்கள். முறையான வெளிச்சமும், உணவுப் பொருட்களும், குடிதண்ணீர் இல்லாமல் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. 

ஒருவர் தனிமையில் இருக்கும் போது மனித மூளை எப்படி செயல்படுகிறது, அச்சமயத்தில் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் போன்றவற்றை பரிசோதிக்க தடகள வீராங்கனை பிளிமினியின் அனுபவத்தை அல்மேறியா மற்றும் கிரனாடா பல்கலைக்கழகங்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. 

இதனால், தனிமையில் ஒரு மனிதன் எப்படி செயல்படுவான் என்பதை அறிந்து, யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கு ஏற்றவாறு செயல்படலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். 

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT