செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று இடத்தில் செவிலியர் பணி வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

கல்கி டெஸ்க்

கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2,031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் கூடிய மாற்று இடத்தில் செவிலியர் பணி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் சார்பில் நலம் 365 எனும் யூடியூப் சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிக ரீதியான நோக்கமின்றி மக்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கவும் நலம் 365 யூடியூப் சேனல் மருத்துவதுறை சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், மக்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு செய்யப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பேசும் பொழுது, கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு 2,347 பேரை எம்.ஆர்.பி தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்தனர்.

அதில் 2,323 பேர் பணியில் சேர்ந்துவிட்டனர். இதனை தொடர்ந்து, 2020ம் ஆண்டில், எம்ஆர்பி மூலம் விண்ணப்பித்த 5,736 பேரில் 2,366 பேரில் பணியில் சேர்ந்தனர்.இந்த பணி நியமனத்தில் அதிமுக அரசால் கொரோனா தொற்றை காரணம் காட்டி சான்றிதழ் பரிசோதனை இல்லாமல், விகிதாச்சார அடிப்படையின்றி, அடிப்படை விதிமுறைகளை மீறி பணியமர்த்தப்பட்டனர்.

பேரிடர் காலத்தில் விதிமுறை மீறி பணிக்கு வந்தவர்களை பணியில் சேர்க்க வேண்டாம் என்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இவர்களை பணியை விட்டு நீக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. நீதிமன்றங்களின் உத்தரவால் நான்கு மாதங்களாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், பணி நீட்டிப்பு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது.

இருப்பினும், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களின் நலன் கருதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி, பொது சுகாதார துறையில் காலியாக உள்ள 2,200 செவிலியர்கள் பணியிடங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு 270 காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு, பணி நீட்டிப்பு செய்ய முடியாத நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,301 ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணி நியமனம், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படும் குழு மூலம் செய்யப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ரூ.14 ஆயிரம் சம்பளம் வாங்கி இருந்தார்கள்.

தற்போது, மாற்று பணியிடம் காரணமாக ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் என்பது சாத்தியம் இல்லை. இதனை கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் உணரவேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT