இந்திய ஆழ்கடல் பகுதியிலுள்ள கனிம வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ம் ஆண்டில் நிறைவுபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இதற்கான பதிலை வழங்கினார். அதில் அவர் தெரிவித்ததாவது;
இந்தியக் கடல் பகுதியிலுள்ள கனிமங்கள் மற்றும் தாதுப் பொருட்களை போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக 'மத்ஸ்யா 6000' என்ற ஆய்வு கப்பலில் சுமார் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு மூன்று ஆய்வாளர்களை அனுப்பும் நோக்கில் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 'மத்ஸ்யா 6000' கப்பலை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) வடிவமைத்து உருவாக்கி உள்ளது.
இந்தக் கப்பலின் வடிவமைப்பு நிறைவடைந்து, சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆராய்வதற்காக சுரங்க இயந்திரம் மற்றும் ஆளில்லா வாகனங்கள் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டம் 2026-ல் செயல்படுத்தப் படும். மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவில் கடற்கரையோரம் 9 மாநிலங்களையும் 1,382 தீவுகளையும் கொண்டிருக்கிறது. சமுத்ராயன் திட்டம் அமல்படுத்துவதன் மூலம் ஆழ்கடல் ஆய்வுகளை இன்னும் சுலபமாக மேற்கொள்ள முடியும்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆழ்கடல் ஆய்வுக்கான நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய வகையில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.