ஐஸ்லாந்து எரிமலை
ஐஸ்லாந்து எரிமலை 
செய்திகள்

ஐஸ்லாந்தில் நெருப்பை கக்கும் எரிமலை.. வெளியேறும் மக்கள்!

விஜி

தொடர்ச்சியான நில அதிர்வுகளின் விளைவாக எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக, ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து நாட்டில் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Volcano: Fire on the Mountain என்ற படத்தின் காட்சிகளை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறது ஐஸ்லாந்து நாட்டின் எரிமலை.

ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில்தான் 14 மணி நேரத்தில் தொடர்ந்து சுமார் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிரண்டாவிக் (Grindavik) பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கிரிண்டாவிக் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான ப்ளூ லகூன் மூடப்பட்டுள்ளது.

கிரிண்டாவிக் நகரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக போலீஸார் சாலைகளை மூடியுள்ளனர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து, அவசர நிலையை ஐஸ்லாந்து அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

உலகின் 18வது பெரிய தீவாக, வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்திருக்கிறது ஐஸ்லாந்து நாடு. 300-க்கும் மேற்பட்ட எரிமலைகளை கொண்ட இந்த தீவு நாட்டில், நிலநடுக்கம் ஏற்படுவது என்பது கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வு என்றே கூறலாம்.

கட்டடங்கள் ஒரு பக்கம் தொடர்ந்து குலுங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், மற்றொரு புறம் காற்றில் கலக்கும் எரிமலை சாம்பலால், சுவாசிக்கவும் சிரமப்படுகின்றனர் அப்பகுதி மக்கள். எனவே, எப்போது வேண்டுமானாலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறும் என்ற அச்சத்தால், அவரச நிலையை அறிவித்துள்ளது ஐஸ்லாந்து அரசு.

இதைத் தொடர்ந்து, கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் வேலைகளை காவல்துறையினரும், பேரிடர் மேலாண்மை குழுவினரும் தீவிரமாக்கியுள்ளனர். அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதால், அங்குள்ள மக்கள் ஆடிப் போய் இருக்கிறார்கள்.

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT