Fingerprint Door Lock Img Credit: United locksmith
அறிவியல் / தொழில்நுட்பம்

தட்டினால் திறக்காது தொழில்நுட்பத்தினால் திறக்கும் அதிநவீனக் கதவுகள்!

என். சொக்கன்

சிறுவயதில் படித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை உங்களுக்கு நினைவிருக்கும். அதில் வரும் திருடர்கள் தங்களுடைய செல்வங்களையெல்லாம் ஒரு குகையில் ஒளித்துவைத்திருப்பார்கள். அந்தக் குகையின் கதவுக்குப் பூட்டு, சாவி கிடையாது. ஒரு குறிப்பிட்ட சொற்றொடரைச் சொன்னதும் அது தானாகத் திறந்துகொள்ளும்.

ஆனால், இது அவ்வளவு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு இல்லை. அந்தத் திருடர்கள் சத்தமாகச் சொல்லும் சொற்றொடரை அலிபாபா கேட்டுவிடுவார், அதைப் பயன்படுத்திக் குகைக்குள் நுழைந்துவிடுவார். பூட்டு சாவியெல்லாம் அப்போது ஏது?

அதனால், நாம் நம்முடைய வீடுகள், கடைகள், அலுவலகங்களின் கதவுகளைப் பூட்டு, சாவி கொண்டு பாதுகாக்கிறோம். இதிலும் சிறு ஆபத்து உண்டு. யாராவது போலிச் சாவி தயாரித்துவிட்டால் வம்புதான்.

இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்குத் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. அதாவது, 'பூட்டைத் திறப்பதற்குச் சாவி என்ற திறவுகோல் வேண்டாம், வேறு வழிகளில் உங்களை நிரூபித்து உள்ளே வாருங்கள்' என்கிறது.

எடுத்துக்காட்டாக, இன்றைக்குப் பல அலுவலகங்களில் Finger Print Scanner எனப்படும் கைரேகை ஸ்கேனர் உள்ளது. அந்த அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள் இந்த ஸ்கேனரில் தங்களுடைய விரலை வைத்து அழுத்தினால் போதும். அது தன்னிடம் இருக்கும் தரவுத்தளத்தில் (database) அந்தக் கைரேகை இருக்கிறதா என்று தேடிப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு கதவைத் திறக்கிறது. இல்லாவிட்டால், 'நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. கதவைத் திறக்கமாட்டேன்' என்று மறுத்துவிடுகிறது.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நுழைவாயில் கதவுமட்டுமின்றி அலுவலகத்துக்குள் இருக்கும் ஒவ்வோர் அறையையும் இவ்வாறே கட்டுப்படுத்தலாம். உரிய நபர்களுக்கு உரிய இடங்களில் மட்டும் அனுமதி வழங்கலாம். எடுத்துக்காட்டாக, பொதுவான அறைகளுக்குள் எல்லாரும் நுழையலாம், ஆனால், ரகசிய ஆராய்ச்சிகள் நடைபெறும் அறைக்குள் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் நுழையமுடியும்.

இங்கு கைரேகைக்குப் பதில் முகத்தையும் பயன்படுத்தலாம். உங்களுடைய செல்பேசியில் உள்ள Face Recognition தொழில்நுட்பம்தான் இங்கும் பயன்படுகிறது. முகத்தைப் பார்த்துத் தரவுத்தளத்தில் ஒப்பிட்டுக் கதவைத் திறக்கிறது, அல்லது, மறுக்கிறது.

இவற்றுடன், ஸ்மார்ட்கார்ட் எனப்படும் எலக்ட்ரானிக் அட்டையைக் கொண்டு திறக்கிற கதவுகள், PIN எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணை உள்ளிட்டால் மட்டும் திறக்கிற கதவுகள், ஒருவருடைய குரலை வைத்து அவரை அடையாளம் காணும் கதவுகள், விரல்களால் ஒரு குறிப்பிட்ட சைகையைச் செய்யும்போது திறக்கும் கதவுகள் என்று தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பயன்படுத்தலாம், அல்லது, கூடுதல் பாதுகாப்புக்கென சில, பலவற்றை சேர்த்தும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் அந்த அலுவலகத்தின் விருப்பப்படி தீர்மானிக்கப்பட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.

ஒருவேளை, அந்த அலுவலகத்துக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால்? அவர்களுடைய கைரேகையோ முகமோ தரவுத்தளத்தில் இருக்காதே. அவர்கள் எப்படி உள்ளே நுழைவது?

இன்றைய நவீன கதவுகளுக்கு அருகிலிருக்கும் அணுகல் இயந்திரங்கள் (Access Devices) இதையும் நன்கு கையாள்கின்றன. வந்திருக்கும் நபருடைய முகத்தைப் படம் பிடித்து, உள்ளே இருக்கும் உரிய நபரிடம் அனுப்பி 'இவர் யாரு? உள்ளே அனுமதிக்கலாமா?' என்று கேட்கின்றன. அவர் அனுமதி கொடுத்தால்மட்டும் கதவைத் திறக்கின்றன.

தேவைப்பட்டால், அந்த நபர் அங்கிருந்தபடியே விருந்தினருடன் பேசலாம், அவருடைய தேவையைப் புரிந்துகொண்டு கதவைத் திறக்கும்படி உத்தரவிடலாம், அல்லது, அப்படியே அவரைத் திருப்பி அனுப்பிவிடலாம்.

முன்பு அலுவலகங்களுக்குமட்டும் தேவைப்பட்ட இதுபோன்ற வசதிகள் இப்போது வீடுகளுக்கும் வந்துவிட்டன. குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் வசிப்போர், தனியாக வசிக்கும் முதியவர்கள் போன்றோருடைய பாதுகாப்புக்கு இவை மிகவும் பயன்படுகின்றன.

இந்த வீட்டுப் பாதுகாப்புக் கருவிகளில் மிகக் கூடுதலாகப் பயன்படுகிற ஒரு வசதி, motion sensing. அதாவது, கதவுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்தல், வீடியோப் பதிவு செய்தல். ஏதாவது சிக்கல் என்று தெரிந்தால் சட்டென்று நம்பகமான ஒரு நண்பரையோ காவல்துறையையோ அழைக்கிற வசதிகூட வந்துவிட்டது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இன்றைய கதவுகள் வெறும் மரம், உலோகம், பிளாஸ்டிக்கால் செய்யப்படுவதில்லை. அவற்றுடன் தொழில்நுட்பத்தையும் சேர்த்துக்கொண்டு நம்முடைய பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டன!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT