International Cooperative Day 
ஸ்பெஷல்

ஜூலை 6: பன்னாட்டுக் கூட்டுறவு நாள்!

தேனி மு.சுப்பிரமணி

1923 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமையன்று, பன்னாட்டுக் கூட்டுறவு நாள் (International Co-operative Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. 

பிரான்சின் சோசலிஸவாதி சார்லஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன் (1771-1858), டாக்டர் வில்லியம் கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த கூட்டுறவுத் தத்துவம், 1844 ஆம் ஆண்டில் ராக்டேல் நகரத் தொழிலாளர்களால் செயல் வடிவம் பெற்றது. 

சேர்ந்து செயலாற்றுதல், சகலருக்கும் பொதுவான தன்மை, தனிநபர் சுதந்திர விருப்பு, சமத்துவம், சனநாயகம், சேவை நோக்கு, தனிநபர் சுதந்திரம், நடுநிலையும் சமூக நீதியும், கூட்டுணர்வு, புதிய சமூக ஒழுங்கு, மனிதரின் அந்தஸ்தினை மதித்தல், உயர் ஒழுக்க நிலை போன்றவை கூட்டுறவின் பொது இயல்புகளாக இருக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிணைக்கும் அமைப்பாக, 1895 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பன்னாட்டுக் கூட்டுறவுக் கூட்டமைப்பு (International Cooperative Alliance) இருக்கிறது. மிகப் பழமையான அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகவும், பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையால் அளவிடப்படும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் இவ்வமைப்பு இருக்கிறது. 

இவ்வமைப்பில் 103 நாடுகளைச் சேர்ந்த 305-க்கும் அதிகமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். விவசாயம், வங்கி, நுகர்வோர், மீன்பிடி, சுகாதாரம், வீட்டு வசதி, காப்பீடு மற்றும் தொழில் மற்றும் சேவைகள் போன்ற பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் சர்வதேச மற்றும் தேசியக் கூட்டுறவு நிறுவனங்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள 3 மில்லியன் கூட்டுறவு அமைப்புகளில் 1 பில்லியனுக்கும் அதிகமான கூட்டுறவு உறுப்பினர்கள் இருக்கின்றனர். உலகக் கூட்டுறவுக் கண்காணிப்பு (2023) புள்ளிவிவரத்தின்படி, மிகப்பெரிய 300 கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சார்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் 2,409.41 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கின்றன. 

உலகெங்கிலும் உள்ள 280 மில்லியன் மக்களுக்கு, அதாவது, உலக மக்கள்தொகையில் 10% பேருக்கு, நிலையான, தரமான வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு அமைப்புகள் பங்களிக்கின்றன.  

இருப்பினும், முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பல துறைகளிலும் தனது முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்தே வந்துள்ளது. நவீன ‘உலகமயமாக்கல்” சிந்தனையுடன் மேலும் இதன் வளர்ச்சிப் போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய உலகம் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவையினை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையேக் கூட்டுறவு, மக்களிடையேக் கூட்டுறவு, கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் பன்னாட்டு அளவில் கூட்டுறவு நாளை நினைவு கூர வாய்ப்பளிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்துருவை முன்னிலைப்படுத்தி, பன்னாட்டுக் கூட்டுறவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கு, 'அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் கூட்டுறவுகள்' எனும் கருத்துரு வழங்கப்பட்டிருக்கிறது. 

2030 ஆம் ஆண்டிற்குள் கூட்டுறவு அமைப்புகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளைச் (Sustainable Development Goals - SDG) செயல்படுத்துவதற்கான முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT