பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்தியா விடுதலை குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, கங்கனாவுக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் அளிக்கப்படவில்லை. அது பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இட்ட பிச்சை. உண்மையில் 2014-ல் தான் இந்தியாவுக்கு நிஜமான சுதந்திரம் கிடைத்தது. அதற்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி என்பது ஆங்கிலேயர் ஆட்சியின் தொடர்ச்சி மட்டுமே!
–இவ்வாறு கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், 1947-ல் இந்தியா பெற்றது பிச்சை என்ற அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். .
இந்நிலையில் கங்கனாவுக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டு ம் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது–
கங்கனாவின் கருத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறாரா என்பது பற்றி அவர் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், கங்கனா மீது சட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும். பத்ம விருது போன்ற உயர்ந்த விருதுகளை வழங்கும் முன்பாக, அதற்கு தகுதியானவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்றவர்கள் நாட்டையும், நாட்டின் ஹீரோக்களையும் அவமானப்படுத்துவதை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.