International Stuttering Awareness Day 
ஸ்பெஷல்

3 வகையான திக்குவாய் பிரச்சனை - குணப்படுத்தும் முறைகள்!

அக்டோபர் 22: பன்னாட்டுத் திக்குவாய் விழிப்புணர்வு தினம்!

தேனி மு.சுப்பிரமணி

பன்னாட்டுத் திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day) அல்லது பன்னாட்டுத் திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர். இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

திக்குவாய் அல்லது பேச்சுத் திணறல் (Stuttering / Stammering) என்பது தாங்கள் எண்ணுவதைப் பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதில் ஏற்படும் தடுமாற்றமாகும். இது ஒரு வகையான பேச்சுக் கோளாறு ஆகும். இக்குறைபாடுடையோரின் பேச்சில் தன்னிச்சையாக மீண்டும் மீண்டும் ஒலிகள் உண்டாதல், சொற்கள் அல்லது சொற்றொடர்களை நீட்டித்தல் மற்றும் தன்னிச்சையான அமைதியான இடைநிறுத்தங்களை வெளிப்படுத்துவர். இதனால் அவா்களின் பேச்சின் ஓட்டம் தடைபடுகிறது. இப்பிரச்சனை பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. பேசும்போது திக்குபவர்களுக்குப் பாடும்போது இப்பிரச்சனை எழுவதில்லை.

திக்குவாய் என்பது உடல் நலனுடன் மனநலமும் சேர்ந்ததாகும். மூளை சொல்வதை உடலுறப்புகள் சரியானபடி புரிந்தேற்காத போது ஏற்படலாம். குடும்பத்தில் மரபு வழியாக அதிகம் காணப்படுவதால், மரபின் தன்மை காரணியாக இருக்கலாம். குழந்தை பேசிப் பழகும் காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இல்லாமல் போவதாலும் பயம், பதற்றத்திற்கு அடிக்கடி ஆளாவதாலும் ஏற்படலாம்.

திக்குவாய்ப் பிரச்சனையை 3 வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. பிறந்ததிலிருந்தே இருக்கும் திக்குவாய்

  2. இளமைப் பருவத்தில் ஏற்படும் திக்குவாய்

  3. மூளைப் பாதிப்பால் ஏற்படும் திக்குவாய்

சித்த மருத்துவத்தில் இக்குறைபாட்டை நீக்க, வசம்புப் பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து தினமும் சாப்பிடுதல், வல்லாரைக் கீரையை அதிகம் சாப்பிடுதல், துளசி இலை கலந்த நீரை இரவு முழுக்க மண் பானையில் வைத்திருந்து மறுநாள் நீரை மட்டும் குடித்தல் என்பது போன்ற சில முறைகள் பயன்படுத்தி, திக்குவாய்க் குறைபாட்டைக் குறைக்கலாம் என்கின்றனர்.

அறிவியல் முறையில், திக்குவாயைக் குணப்படுத்தும் முறைகள் எதுவும் இல்லை என்றாலும், இதற்கான பல தீர்வு முறைகள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் அவரது தனித்தன்மையைப் பொறுத்து, சிறந்த பலனளிக்கக்கூடிய முறையைத் தேர்வு செய்ய வேண்டும். சிகிச்சை தேவைப்படும் தனி நபரின் தேவைக்கு ஏற்றபடி அந்தச் சிகிச்சை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். பேச்சு மொழி மருத்துவரும், சிகிச்சை பெரும் நபரும் இணைந்து, செயற்பட்டுத் தொடர்பாடலில் தன்னம்பிக்கை, உணர்ச்சிகளையும் மன அழுத்தத்தையும் கையாளும் திறன், போன்ற அவர்களது திக்கலுக்குக் காரணமாயுள்ள காரணிகளை முன் வைத்துப் பயிற்சிகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

சமூகத் திறன் பயிற்சி அளித்தல், திக்குவாய் உள்ளவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையையும் பதற்றத்தையும் களைதல், பேசும் போது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்தல் போன்ற சில பயிற்சிகளும் திக்குவாய்க் குறைபாட்டை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 21 ஆம் நாளன்று, உலகெங்கிலும் உள்ள திக்குவாய் சமூகங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்று கூடி, சமூகத்தின் சில நிலைகள் திக்குவாய் நபர்களுக்கு எவ்வாறு கடினமாக இருக்கும்?, எதிர்மறை அணுகுமுறைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்ளல், திக்குவாய் நபர்கள் பதட்டமானவர்கள் அல்லது குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்ற கட்டுக்கதைகளை நீக்கல் போன்றவற்றை முன்னிலைப்படுத்த நிகழ்வுகளையும் பரப்புரைகளையும் நடத்துகின்றன.

கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்த தந்தை… கிரிக்கெட் வீராங்கனைக்கு வந்த சிக்கல்!

இதோ ஈஸியான தீபாவளி பட்சண டிப்ஸ் உங்களுக்காக..!

ஓ! இதனால தான் கிரிக்கெட் வீரர்கள் சுவிங்கம் மெல்கிறார்களா? 

குறையில்லாத குழந்தைப் பேறு - தாயாகப் போகும் இளம் பெண்களே, கொஞ்சம் கேளுங்க!

செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப்போடாதீர்கள்!

SCROLL FOR NEXT