வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு :
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு பேருந்து, இரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சுற்றுலா வருவதற்கு பயணிகள் யாருக்கும் அனுமதியில்லை.
வேலூர் மாவட்ட எல்லைகளில் இது தொடர்பாக காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக்கவசம் அணியாமல் கடைக்கு வந்தால் அவர்களுக்கு எவ்வித பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது.
பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகழுவியும், சமூக இடைவெளி தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே இந்நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த இயலும்.
_ இவ்வாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.