அதிமுக முன்னாள் அவைத்தலைவரும் பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
85 வயதான புலவர் புலமைப் பித்தன் மூச்சு திணறல் காரணமாக சென்னனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து அவரது உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புலவர் புலமைப் பித்தன் இதுவரை 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றுள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கு நெருக்கமான புலமைப்பித்ததன், அவரது பல்வேறு திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ''ஆயிரம் நிலவே வா'' மற்றும் '', நான் யார்.. நான் யார்'' ஆகியவை உட்பட பல பிரபல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.