பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித்துறை சோதனையிட்டது. இந்நிலையில் தான் மீண்டும் மக்கள் சேவைக்கு வந்து விட்டதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.
நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பலருக்கும் சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக திகழ்ந்து வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மும்பையில் சோனு சூட் மற்றும் அவர் கூட்டாளிகளுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதில் அவர் 20 கோடி ரூபாய் வரை அவர் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வருமான வரிச் சோதனை குறித்து நடிகர் சோனு சூட் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"நீங்கள் எல்லா சமயங்களிலும் உங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல வேண்டியதில்லை. காலம் அதற்கான பதிலைச் சொல்லும். நான் வலிமையுடனும் திறந்த மனதுடனும் மக்களுக்காக சேவை செய்ய என்னை அர்ப்பணித்துள்ளேன். என் அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றவும் தேவையானவர்களுக்கு உதவுவதற்காகவுமே காத்திருக்கிறது. கடந்த 4 நாட்களாக சில விருந்தினர்களை சந்திப்பதில் பிசியாக இருந்ததால், உங்கள் சேவைக்காக வர இயலவில்லை. இப்போது மீண்டும் வந்துவிட்டேன். என் பயணம் தொடர்கிறது.
-இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.