10 Great Benefits of Asafoetida! https://www.herzindagi.com
ஆரோக்கியம்

பெருங்காயத்தின் 10 பெரும் பலன்கள்!

எஸ்.விஜயலட்சுமி

பெருங்காயம் இல்லாத இந்திய சமையலை நினைத்துப் பார்க்கவே முடியாது. துளி அளவு பெருங்காயத்தூள் சேர்த்தாலே சாம்பார், ரசம் கமகமக்கும். பெருங்காயம் வெறும் மணமூட்டி மற்றும் சுவையூட்டி மட்டுமல்ல, அதில் ஏராளமான ஆரோக்கிய பலன்களும் உள்ளன. அதன் பெரும் 10 நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. உணவு ஜீரணம் ஆவதற்கு பெருங்காயம் மிகச்சிறந்த ஒரு பொருள். சிலருக்கு துவரம் பருப்பு, கொள்ளு போன்றவற்றை உட்கொள்ளும்போது வாய்வு பிடிப்பு ஏற்படும். அதனால் துவரம் பருப்பு சாம்பார், கொள்ளு பருப்பு, ரசம் செய்யும்போது, துளி அளவு பெருங்காயம் சேர்த்தால் போதும், அது ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.

2. இது குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை குறைக்கிறது. அதனால் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. குடல் புண், குடல் புழுக்கள் போன்ற பிரச்னைகளையும் தீர்க்கிறது.

3. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழல் அழற்சி ஏற்படும் சமயங்களில் பெருங்காயத்தை உட்கொண்டால் உடனே தீர்வு காணலாம். சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூச்சு விட சிரமப்படும் சமயங்களில் பெருங்காயத்தூளில் சிறிதளவு வெந்நீர் இரண்டு, மூன்று சொட்டு விட்டு கரைத்து அதனுடைய தொண்டையிலும் நெஞ்சிலும் தடவி விட்டால் சளி, இருமல் சரியாகும்.

4. வயிறு வீக்கம், வயிற்று வலியால் அவதிப்படுவோருக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து குடித்தால் வயிற்று வலி சரியாகும்.

5. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் பெருங்காயத்தூள் கலந்த தண்ணீரை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

6. தினமும் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப் பாதை அடைப்புகளை நீக்கி சிறுநீரகத் தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

7. இரத்த சோகை உள்ளவர்களுக்கு பெருங்காயம் கைகண்ட மருந்து. பெருங்காயத்தூளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை பிரச்னையை சரி செய்கிறது.

8. பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்நீரில் 2 சிட்டிகை பெருங்காயத் துளை கலந்து குடித்தால் வயிற்று வலி சரியாகும்.

9. பெருங்காயம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. அதாவது பெருங்காயத்தை தினமும் எடுத்துக் கொண்டால் அது உணவை எரிக்கும் விகிதத்தை மேம்படுத்தி சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவுகிறது.

10. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெந்நீரில் ஒரு துளி பெருங்காயத்தூளை கலந்து குடித்து வரவும்.

கடைகளில் பெருங்காயத்தூளை டப்பாக்களில் அடைத்து விற்கிறார்கள். அதை வாங்கக்கூடாது. ஏனென்றால் அதில் நிறைய ரசாயனங்கள் கலந்திருக்கும். அது உடலுக்கு ஏற்றது அல்ல. அதனால் பெருங்காயத்தை எப்போதும் கட்டியாக வாங்கி அதை வெறும் வாணலியில் போட்டு சூடாக்கினால் அது இளகத் தொடங்கும். பின்பு அதை சிறு சிறு கட்டியாக உடைத்துக் கொள்ளலாம். அதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து நைசாக பொடி செய்து டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு அதை உபயோகிக்க வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT