அம்மான் பச்சரிசி என்ற சிறிய வகை செடி சாதாரணமாகவே வயல்களில் வளர்ந்திருக்கும். இது அதிகப்படியான மூலிகை குணங்கள் நிறைந்தது. இந்த செடியை கிள்ளினால் பால் வடியும். இந்த செடியை உணவாக எடுத்துக் கொள்வது மூலமாக உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. முற்றிலும் வித்தியாசமான பெயர் கொண்ட அம்மான் பச்சரிசி மருத்துவ குணங்களிலும் வித்தியாசமானதாகப் பார்க்கப்படுகிறது.
அம்மான் பச்சரிசி பாலை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அது உதிரும் என சொல்வார்கள். மேலும் இதை காய வைத்து பொடியாக்கி வெந்நீரில் கஷாயம் போல குடித்தால் வறட்டு இருமல் உடனடியாக குணமாகும்.
தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான பால் சுரக்காதபோது அம்மான் பச்சரிசியின் பூக்களை பசும்பால் சேர்த்து அரைத்து அதை பாலிலேயே கலந்து காலையில் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதன் இலைகளை வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் போல செய்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். மேலும் இதற்கு உடல் சூட்டை தணிக்கும் பண்பு இருப்பதால், வாரம் ஒரு முறையாவது உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.
வாய்ப்புண் பாதிப்பு உள்ளவர்கள் அம்மான் பச்சரிசி இலையை சமைத்து சாப்பிட்டால் சரியாகும். அதேபோல வாய் மற்றும் நாக்கு பகுதியில் ஏற்படும் வெடிப்புகளை இது விரைவாக போக்கும். பாதங்களில் ஏற்படும் அரிப்புக்கு அம்மான் பச்சரிசியை மஞ்சள் சேர்த்து அரைத்து பாதத்தில் தடவினால் விரைவில் பாதிப்பு குறையும்.
சிலருக்கு பாதங்களில் கால் ஆணி இருக்கும், அந்த இடத்தில் அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகும் என்கின்றனர். உங்களுக்கு வெப்பம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் அம்மான் பச்சரிசியை அரைத்து மோரில் கலந்து குடித்தால் எவ்விதமான சூடு சம்பந்த நோய்களும் அண்டாது.
எனவே இந்த அற்புதமான மூலிகையை உங்களின் உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இதை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெற்று சேர்த்துக் கொள்வது நல்லது. ஏற்கனவே நாள்பட்ட நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவரின் பரிந்துரை பேரிலேயே எவ்விதமான மூலிகை உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.