Do you know about the health benefits of a balanced diet? 
ஆரோக்கியம்

சமச்சீர் உணவு முறையால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

சாப்பிடும்போது கலோரி கணக்கு பார்த்து சாப்பிடாதீர்கள். முடிந்தளவு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து, நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவுத் தட்டில் அரைப்பகுதி காய்கறிகளுக்கும், கால் பகுதியில் புரோட்டீன் நிறைந்த (முட்டை, மீன், சிக்கன்) உணவுகளுக்கும். கால் பகுதியில் பாலீஷ் செய்யப்படாத தானிய உணவுகள் (பழுப்பு அரிசி, ஒடஸ்) மற்றும் கொஞ்சம் ஆரோக்கியமான எண்ணெய் (ஆலீவ் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்) உணவுகளுக்கும் கொடுத்து சரிவிகித உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமச்சீரான உணவுகள் உங்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். சமச்சீர் உணவு (தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, இறைச்சி, மீன், பால், தயிர், மோர், நெய் போன்ற பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள். சமச்சீர் உணவு 4ல் ஒரு பங்கு கார்போஹைட்ரேட் அதேபோல் 3 பங்கு காய்கறிகளில் 2 பகுதியில் பழங்கள் இருக்க வேண்டும்.

ஒரு மனிதனின் எடையில் ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரோட்டீன் சத்து ஒரு நாளைக்குத் தேவை என்கிறார்கள். அதாவது உங்கள் உடல் எடை 60 கிலோ என்றால் ஒரு நாளைக்கு 60 கிராம் புரோட்டீன் தேவை. சைவ உணவுக்காரர்கள் என்றால் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் (20 கிராம் புரோட்டீன்), 250 கிராம் அரிசி, 100 கிராம் கோதுமை, 50 கிராம் பருப்புகளில் (40 கிராம் புரோட்டீன்) பெற்று விடலாம் என்கிறார்கள். இதுதான் ஒரு மனிதன் விஞ்ஞான முறைப்படி சாப்பிடும் முறை. இதற்காகததான் சமச்சீர் உணவு அவசியம் என்கிறார்கள்.

மனித உடல் ஒரு நாளைக்கு 50 கிராம் எண்ணெய்யை பயன்படுத்திக்கொள்ளும். அதில் நாம் சாப்பிடும் உணவில் இருந்து 20 கிராம் கிடைக்கும். மீதி 30 கிராம் சமையலின்போது நாம் ஊற்றி அதை பெறுகிறோம். இதன்படி சராசரி மனிதன் ஒருவனுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் எண்ணெய் போதும் என்பதுதான். ஒரு காருக்கு எப்படி பெட்ரோல் தேவையோ அப்படி நம் உடலுக்குத் தேவை கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து. இது நமது உழைக்கும் உழைப்புக்கு ஏற்றபடி இருந்தால் ஓ.கே. அதிகப்படியானால் அது உடலில் தங்கி குளூக்கோஸாக மாறி சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கிறது.

பெரிய உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஆரோக்கியமான நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் போன்ற ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதில் சிப்ஸ், கேக் போன்றவைகளாக இருக்கக் கூடாது. சாக்லேட் மற்றும் ஓயின் போன்றவற்றை அளவாக எடுத்துத் கொள்ளலாம்.

சாப்பிடும்போது உங்கள் முழு கவனத்தையும் சாப்பாட்டின் மீது செலுத்தி ருசித்து நிதானமாக சாப்பிடுங்கள். சாப்பிடும்போது டிவி பார்ப்பது, செல்போன் உரையாடலில் ஈடுபடுவது, அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடுவது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். நிதானமாக சாப்பிடுவது, சாப்பிடுவதின் முழுமை உணர்வை தூண்டுவதற்கு உதவும். இது ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிக்கும். அதிக உணவு எடுப்பதைத் தவிர்க்க உதவுகிறது. அதன் மூலம் எடை இழப்பிற்கு உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. சாப்பிட்ட திருப்தியை உணர வைக்கிறது.

அதிக சர்க்கரை கலந்த உணவுகள், அல்ட்ரா புராசெஸ் உணவுகள், குளிர் பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள், சோடா போன்றவற்றைத் தவிருங்கள். காபி மற்றும் டீயை அளவாக எடுத்துக் கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து குறைபாடு வராமல் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும். தண்ணீர் குடிப்பதால் உமிழ்நீர் சுப்பது குறைவதுடன், செரிமான சாறும் வயிற்றில் வெளியிடப்படுவதில்லை. ஆதலால், சாப்பிடப்போகும் அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ தண்ணீர் பருகவும்.

உணவு ஆரோக்கியத்திற்கும் உங்கள் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, குறித்த நேரத்தில் படுக்கச் செல்லுங்கள், குறித்த நேரத்தில் எழ பழகுங்கள். படுக்கச் செல்லும் முன் டிவி, செல் பார்ப்பதை முற்றிலும் தவிருங்கள். தூங்கும் முன் டீ, காபி வேண்டாம். எக்காரணம் கொண்டும் இரவு 11 மணி முதல் 3 மணி வரை தூங்குவதற்குத் தடை செய்யாதீர்கள்.

சாப்பிடும்போது கோபத்திலோ அல்லது எதிர்மறை உணர்ச்சியுடனோ சாப்பிட்டால், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் குறைகின்றது. அசௌகரியமான சூழ்நிலையில், அதாவது அதிக வெப்பத்தில் நின்று உணவு உண்பது ஊட்டச்சத்து உறிஞ்சுவதை குறைக்கின்றது.

சாப்பிடும்போது தவறி தரையில் விழுந்த உணவு துண்டை 3 நொடிகளுக்குள் எடுத்து விட்டால் அதை சாப்பிடலாம் என்ற ஒரு கருத்து உலகெங்கும் உண்டு. ஆனால் தரையில் விழுந்த எந்த உணவையும் எடுத்து உண்ணாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள் நியூயார்க் யுனிவர்சிட்டி ஆப் மெடிசின் ஆராச்சியாளர்கள். எந்த உணவுப் பொருட்களானாலும் அது தரையை தொட்டவுடனேயே தரையில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுடன் இணைந்து கொள்கிறது. எனவே, அது ஆரோக்கிய குறைபாட்டை உடனே ஏற்படுத்துகிறது என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT