Traditional medicine for diabetes https://www.health.harvard.edu
ஆரோக்கியம்

நீரிழிவு நோயை தவிர்க்க பாரம்பரிய மருத்துவம் பரிந்துரைக்கும் உணவுகள்!

கோவீ.ராஜேந்திரன்

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலமாக எளிதில் நீரிழிவு நோயை விரட்டலாம் என்கிறது பாரம்பரிய மருத்துவம். அதற்கு அவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள் சிவப்பு அரிசியில் உள்ள அந்தோசைனின் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. இது நீரிழிவை கட்டுப்படுத்துகிறது. குறைவான க்ளைசெமிக் குறியீடு காரணமாக சிவப்பு அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. சிவப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து நமது குடலை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கலை தடுக்கிறது.

பார்லி இரத்த சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து டைப் 2 டயாபடீஸ் ஏற்படாமல் தடுக்கிறது. இதற்கு பார்லியின் உயர் மெக்னீசிய சத்து உதவுகிறது. பார்லியின் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீருடன் கரைந்து, செரிமான மண்டலத்திற்கு நகர்ந்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சும் அளவை குறைக்கிறது. பார்லியில் செய்யப்படும் காலை உணவு, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது.

பருப்புகள் , நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாகப் பார்க்கப்படுகிறது. பாசிப்பயறு உடல் திசுக்களை நல்ல நிலையில் வைக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்து இது. இதயத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு 38. கடலைப்பருப்பு (சுண்டல்), குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு கொண்டது. இதிலுள்ள நார்ச்சத்து இன்சுலின் அளவை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதோடு உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் முக்கிய வைட்டமின்களும் கொண்டது. துவரம் பருப்பு, கொள்ளு குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு கொண்டவை. இரத்தத்தில் குளுக்கோஸ் மெதுவாக உயர வழி செய்கிறது. மேலும் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வாகிக்க உதவுகிறது.

பாகற்காயில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரையின் அளவை குறைக்கவும், இன்சுலின் சுரப்பை சீராக்கவும் உதவுகிறது. தினமும் காலை ஒரு கிளாஸ் பாகற்காய் ஜூஸ் குடிக்கவும். இது இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும். இன்சுலினை சமநிலைப் படுத்தவும், உடலில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தவும் உதவும்.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்குவதுடன், வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தை சரிசெய்யவும் உதவுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பீர்க்கங்காய் ஒரு சிறந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். இதில் இருக்கும் ஃபைபர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.இதில் உள்ள பீட்டா கரோட்டின் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.

நெல்லிக்காய் வைட்டமின் சியும் ஆன்டி ஆக்சிடென்ட்டும் நிறைந்தது. இதில் உள்ள குரோமியம், சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதைக் கழுவி விட்டு பச்சையாகவோ அல்லது காய வைத்து அரைத்து பவுடர் செய்தோ தினமும் சாப்பிடலாம்.

அத்திப்பழத்தில் 13.6 சதவீதம் நீர்ச்சத்தும், 7.4 சதவீதம் புரதச்சத்தும், 5.6 சதவீதம் மாவுப்பொருளும், 17.9 சதவீதம் நார்ப்பொருளும், 6.5 சதவீதம் சாம்பல் சத்தும், 0.91 சதவீதம் பாஸ்பரிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற பல்வேறு உலோகச் சத்துக்களும் உள்ளன. ஆற்றல் மிக்க சர்க்கரை கொண்டதால் சர்க்கரை நோய் தீர இது பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் என்றாலே அதற்கு சிறந்த மருந்தாகக் கூடிய நாவல் பழத்தில், எரிசக்தி, மாவுச்சத்து, நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, தயாமின், ரிபோஃப்ளோவின், நியாசின், வைட்டமின் A, C, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், உப்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.

விளாம்பழம் சாப்பிடுவதால் இரத்தம் அதிகரித்து, இரத்தத்தில் உள்ள கெட்ட செல்களை அழிக்கிறது.. விளாம்பழத்திற்கு இரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே, எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் மற்றும் முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

பேரீச்சம்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதோடு கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இயற்கையாகவே இனிப்பு சுவையை அளிக்கும் இதில் பிரக்டோஸ் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்தது.

பாரம்பரிய மருத்துவத்தில் கடுகு எண்ணெய், சுவாச பிரச்னைகளுக்கு மற்றும் சர்க்கரையின் தீவிரம் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT