மாரடைப்பு https://manithan.com
ஆரோக்கியம்

மாரடைப்பில் இருந்து தப்பிக்க மகத்தான யோசனைகள்!

கோவீ.ராஜேந்திரன்

நாட்டில் நாளுக்கு நாள் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் பெருகிக் கொண்டே போகின்றனர். இதற்குக் காரணம் தவறான பழக்க வழக்கங்கள். இதனை தவிர்க்க மருத்துவ நிபுணர்கள் தரும் ஆரோக்கியமான வழி முறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

குறித்த நேரத்தில் வேலைக்குக் கிளம்ப, உணவு உண்ண, விளையாட, பொழுதுபோக்கில் ஈடுபட, குடும்பத்துடன் நேரத்தை செலவிட என தினசரி உங்கள் நேரத்தை திட்டமிடுங்கள். பதற்றத்திற்கு இடம் தராதீர்கள். பஸ், ரயில், விமானப் பயணம் புறப்படுகிறீர்களா? குறித்த நேரத்திற்கு முன்பே, குறித்த இடத்தில் சேர்ந்து விடுங்கள். அப்படியே பயணம் தவறினால் கூட கவலைப்படாதீர்கள். வெயிட்டான எந்தப் பொருளையும் நின்ற நிலையிலிருந்து தூக்காதீர்கள். கீழே உட்கார்ந்த நிலையிலிருந்து தூக்கிப் பழகுங்கள்.

உண்ணும் உணவை எளிதாக இருந்தாலும் ரசித்து உண்ணுங்கள். விரைவில் ஜீரணமாகும். சாப்பிடும்போது சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தி சாப்பிடுங்கள். ஊர் கதை, உலகக் கதைகள் பேசியபடி சாப்பிட வேண்டாம்.

நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி சிரித்துப் பேசி மகிழுங்கள். எப்போதும், எதையோ பறிகொடுத்தது போல இருக்காதீர்கள். தனிமையில் தவிக்காதீர்கள். உலகம் மிகப் பெரியது. உங்களைத் திடுக்கிட செய்ய, மூட் அவுட் செய்ய பேசுவோரின் பேச்சுகளுக்கு, பதிலாக, ‘அப்படியா பரவாயில்லை’ என்று உறுதியாகப் பேசுங்கள்.

இரவு படுக்கப்போகும் முன், ‘பொழுது விடிந்ததும் அவன் வருவான், இவன் வருவான், அந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது’ என்ற கவலையுடன் படுக்கச் செல்லாதீர்கள். ஓர் இரவில் எவ்வளவோ நடக்கின்றது. ‘நான் நல்ல ஓய்வு கொள்கிறேன், நிம்மதியாக தூங்கி கண் விழிப்பேன்’ என்று நினைத்து நிம்மதியாக தூங்குங்கள். நல்ல தூக்கம் பரிபூரண ஆரோக்கியத்தைத் தரும். தினமும் அவசியம் 6 முதல் 8 மணி நேரம் இரவில் தூங்குங்கள்.

எதிலும் நிதானம் தவறாதீர்கள். விருந்து, கேளிக்கை, உரையாடல், பேச்சு எதுவானாலும் சரி... அளவுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதயத்திற்கு நெருக்கடி தரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை அறவே தொடாதீர்கள்.

உங்கள் வயது எதுவானாலும் சரி, உடலுக்கு சிறிதளவு உடற்பயிற்சி அவசியம். நாள்தோறும் 5 கி.மீ. தொலைவுக்குக் குறையாமல் நடந்தால். அநேகமாக எந்த இதய நோயாக இருந்தாலும் அது தீவிரமடையாமல் தடுக்கலாம்.

நடப்பதை போல சைக்கிள் ஓட்டுதலும் நன்மை தரும். தினமும் ஏதாவது ஆக்டிவ்வான செயல்களில் ஈடுபடுங்கள்.

முடிந்த மட்டும் வீட்டில் சமைத்த உணவுகளையே உண்ணுங்கள். வெளியே சாப்பிடுவதைத் தவிருங்கள். புத்தம் புதிய காய்கறிகள், பழங்கள், பசுமையான கீரைகள் உங்கள் அன்றாட உணவில் பெருமளவு இடம் பெற வேண்டும். தினமும் ஒரு வகை பழம் உண்ணத் தவறாதீர்கள். முழுமையான தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தேர்வு செய்து சமையுங்கள். உங்கள் உணவில் வாரம் இருமுறை ஒமேகா 3 சத்துள்ள உணவுகளை, குறிப்பாக கொழுப்புள்ள மீன்கள், ஆளி விதை, வால்நட், சோயா பீன்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பிரட், ரொட்டி, புரோட்டா, சப்பாத்தி, வெண்ணெய், நெய், டால்டா போன்ற கொழுப்பு பொருட்களை சிறிதளவே சேர்த்து அல்லது தவிர்த்து உணவு தயாரிக்க வேண்டும்.

தினமும் 2 முதல் 3 லிட்டர் நீரை அவசியம் பருகுங்கள். உணவில் சோடியம் உப்பு அளவாக சேருங்கள். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சியை உண்ணத் தேர்வு செய்யுங்கள். அவற்றையும் வேகவைத்து உண்ணுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிருங்கள். முட்டையின் வெள்ளைக் கருவை எப்போதும் சாப்பிடலாம், மஞ்சள் கருவை வாரம் மூன்று மட்டுமே சாப்பிடலாம். எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்றால் நல்ல எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

புத்தம் புதிய பழச்சாறுகள், பால் சேர்க்காத கடும் டீ அல்லது காபி குறைந்தளவு சர்க்கரைக்கு மாற்றான வேறு இனிப்புகள் (கருப்பட்டி, நாட்டு வெல்லம்) கலந்து குடிக்கலாம். கிரீம் கலக்காத கேக், ஏடெடுத்த பால் மற்றும் அதில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால், அவற்றை சாப்பிடும் போது பிற உணவுகளை உண்ணக்கூடாது. ஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 40 வயதிலும் கட்டாயம் இதயப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை ஈ.சி.ஜி எடுத்துப் பார்த்துக்கொள்வது நல்லது.

மன அழுத்தம் இதய நோய்களுக்கு விடப்படும் அழைப்பு. மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க அமைதியான இடம் ஆலயமானாலும் சரி, சமயக் கூடமாக இருந்தாலும் சரி தியானம் செய்து வாருங்கள். உடல், உள்ளம், உணர்வுகள் எல்லாம் அமைதி கொள்ள யோகா செய்யலாம்.

மனதிற்கு அமைதி, முறையான வாழ்க்கை, ஆபத்தில்லாத இயற்கையான உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்களை தவிர்த்து வாழ்வதே இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT