இரைப்பை குடல் நோய் https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

டைவர்டிகுலிடிஸ் எனும் இரைப்பை குடல் நோயைத் தடுப்பது எப்படி?

தி.ரா.ரவி

டைவர்டிகுலிடிஸ் என்பது இரைப்பை குடல் நோயாகும். குடல் சுவர்களில் உருவாகும் டைவர்டிகுலா எனப்படும் சிறிய பைகளில் ஏற்படும் அழற்சி அல்லது தொற்று டைவர்டிகுலிடிஸ் என அழைக்கப்படுகிறது. டைவர்டிகுலிடிஸ் ஏற்படும் போது, அது குறிப்பிடத்தக்க வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

காரணங்கள்:

1. வயது: இந்த நோய் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. வயதாக வயதாக இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

2. உணவு முறை: தவறான உணவுப் பழக்கம் இந்த நோய்க்கு வழி வகுக்கிறது. நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் மலச்சிக்கலை உருவாக்குகிறது. இது பெருங்குடலில் அதிக அழுத்தத்தை அதிகரிக்க வழி வகுக்கிறது.

3. அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணுதல்: சில ஆய்வுகள் கொழுப்பு மற்றும் சிவப்பு இறைச்சி அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இந்த நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறுகின்றன.

4. உடல் செயல்பாடு இல்லாமை: உட்கார்ந்த நிலையிலேயே பணி செய்வது, வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது, உடற்பயிற்சி இல்லாமை போன்றவை இந்த நோய்க்கு காரணமாக அமைகின்றன. உடலுக்கு தேவையான அசைவுகள் மற்றும் வேலை கொடுக்காமல் நாள் முழுக்க அமர்ந்தபடியே இருப்பது சிக்கலை தரும்.

5. உடற்பருமன்: உடல் பருமனை எப்போதும் கண்காணித்து வரவேண்டும். உடல் எடையை சரியாக நிர்வகிக்க வேண்டும். பருமனான உடல்வாகுக் கொண்டவர்களுக்கு இந்த நோய் கடுமையான சிக்கல்களை உண்டாக்கும்.

6. புகைப்பிடித்தல்: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

7. ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்: ஸ்டீராய்டுகள் மற்றும் ஓபியாய்டுகள் கொண்ட மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த நோய் தாக்கம் அபாயம் உள்ளது.

8. மரபியல்: மரபியல் காரணமாகவும் இந்த நோய் வரலாம். ஒரு குடும்பத்தில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்:

1. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்: தினமும் உணவில் நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள் காய்கறிகள் முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்து இரைப்பை குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இந்த நோய் வராமல் தடுக்க உதவும்.

2. நீரேற்றம்: தினமும் தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும். மேலும் திரவ வடிவில் ஆன ஆப்பிள் அல்லது திராட்சை சாறு போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அது குடலை ஆரோக்கியமாக செயல்பட உதவும். மலச்சிக்கலை தடுக்கும்.

3.தீய பழக்கங்களை கைவிடுதல்: மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்றவற்றை நிறுத்தி விட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

4. ஆரோக்கியமான எடை: ஆரோக்கியமான எடையை எப்போதும் பராமரிப்பது நல்லது. உயரத்திற்கு அல்லது வயதுக்கு அதிகமான எடை இருந்தால் உடனே அதை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உடலை சரியான எடையில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

5. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை: எப்போதும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இது இந்த நோய் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT