Moringa Spinach Powder 
ஆரோக்கியம்

முருங்கைக் கீரை பொடி... Very Tasty; Very Very Healthy!

முனைவர் என். பத்ரி

மருத்துவ குணம் நிறைந்த முருங்கைக்கீரை பொடி... சிம்பிளா வீட்டிலே செஞ்சுடலாம்... ரெடி?

மருத்துவ குணம் நிறைந்த முருங்கைக்கீரை:

கிராமப் புறங்களில்  இலவசமாக கிடைக்க கூடியது முருங்கைக் கீரை. நாம் சாதாரணமாகக் கருதக்கூடிய இந்த முருங்கைக்கீரை பல மருத்துவ குணங்களைக் கொண்டது. முருங்கைக்கீரையைப் பொடியாகச் செய்து வைத்துக்கொள்வதன் மூலம் நாம் அன்றாட உணவில்  தினமும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.

முருங்கைக்கீரை அதிக ஊட்டச்சத்து மதிப்புமிக்கது.  இதனால் இது ஒரு ’சூப்பர் ஃபுட்’ என கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

நமது அபிமான காலை உணவான இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட இட்லி பொடியுடன் முருங்கைக் கீரையைக் கலந்து பயன்படுத்தலாம்.

உடல் எடையைக் குறைக்கத் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் எவ்வளவோ முயற்சித்த பின்னரும் பலன் கிடைக்கவில்லை என்றால் கட்டாயமாக முருங்கைக்கீரை சாப்பிடலாம். இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு என முருங்கை மூலமாகக் கிடைக்கின்ற பலன்கள் ஏராளம்.

முருங்கைக் கீரை பொடியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண் நோய், கபம், மந்தம் போன்ற அனைத்தும் குணமாகும். மேலும் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது முருங்கைக்கீரை சாப்பிடுவது நல்லது.

முருங்கைக் கீரை பொடியை வீட்டிலேயே தயாரிக்க:

முருங்கைக் கீரை ஒரு கட்டு, வேர்க்கடலை இரண்டு டேபிள் ஸ்பூன், மல்லி இரண்டு டீஸ்பூன், புளி சிறிதளவு, கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 10, கருப்பு எள் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 1/4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

முருங்கைக் கீரை பொடி செய்முறை:

முதலில் முருங்கைக் கீரையின் காம்புகளை நீக்கி அதன் இலைகளை சுத்தமாக ஆய்ந்த பிறகு அவற்றைத் தண்ணீர் கொண்டு நன்றாக அலசி தண்ணீர் முழுவதுமாக வடிகட்டி எடுக்க வேண்டும். பின்பு காட்டன் துணி ஒன்றை எடுத்து அதன் மேல் இந்த அலசி வைத்துள்ள முருங்கை இலையைப் பரப்பி நன்றாகத் தண்ணீர் இல்லாமல் உலர வைத்து எடுக்க வேண்டும்.

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் லேசாக சிவந்த பிறகு அவற்றுடன் சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாகச் சிவந்த பிறகு அதில் பெருங்காயத்தையும், புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் உலர வைத்துள்ள முருங்கைக் கீரை சேர்க்க வேண்டும்.இப்போது முருங்கைக்கீரை நன்றாகச் சுருள ஆரம்பித்துப் பாதி அளவு வறுபட்டவுடன் அதை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக ஆறிய உடன் மிக்ஸி ஜாரில் நாம் வறுத்து வைத்திருக்கும் அனைத்துப் பருப்பு வகைகளையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதோடு வறுத்து வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் முருங்கைக் கீரை பொடி ரெடி. இனி இதை உணவில் சேர்த்து உடலில் ஆரோக்கியத்தைச் சேர்க்க வேண்டியதுதான்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT