Perungayam gives flavor to food and health to the body https://www.magzter.com
ஆரோக்கியம்

உணவுக்கு சுவையும், உடலுக்கு சுகத்தையும் தரும் பெருங்காயம்!

கோவீ.ராஜேந்திரன்

ணவின் சுவையை அதிகரிக்க பல வகையான மசாலா பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அவை உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அப்படி உணவிற்கு சுவையையும் தந்து சுகத்தையும் வழங்கும் ஒரு பொருள்தான் பெருங்காயம்.

பெருங்காயத்தின் தாவரவியல் பெயர், `பெருலா அசபொட்டிடா.’ ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக மரம் போல வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.

பெரும்பாலான சமையலறையில் இதன் மணத்திற்காக உணவில் சேர்த்து வரும் இந்தப் பொருள், ஆஸ்துமா முதல் மாதவிடாய் கால வலி வரை பலவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தரும் பெருங்காயம்தான் அது. பெருலா தாவரத்தின் தண்டுகளிலிருந்து பெறப்படும் இது ஒரு வலுவான கந்தக வாசனையைக் கொண்டுள்ளது.

இது இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, வயிற்று வலி போன்ற பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயத்தில் இயற்கையாக இரத்த உறைவை தடுக்கும் சேர்மங்கள் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

சமையலில் பெருங்காயத்தை சேர்ப்பது ஆரோக்கியமாக இதயத்தை பராமரிக்க ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஆஸ்துமாஅழற்சி எதிர்ப்பு, வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெருங்காயம் கொண்டிருப்பதால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வறட்டு இருமல் போன்ற பிற சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தப் பயன்படுகிறது.

மென்மையான சுவாசப் பாதையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் கரைத்து மூலிகை டீயாக குடிப்பதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.

பெருங்காயம் மாதவிடாய் வலியைப் போக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது. ஏனெனில், இதில் இயற்கையாகவே இரத்த உறைவை தடுக்கும் பண்பு உள்ளது. அது மட்டுமன்றி, உடலின் எந்தப் பகுதியிலும் தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது. இதன் காரணமாக இது மாதவிடாய் தொடர்பான முதுகு மற்றும் அடிவயிற்று வலியைக் குறைக்கிறது. இலகுவான இரத்த ஓட்டம் மற்றும் வலி நிவாரணத்தை ஊக்குவிக்கிறது. எனவே, மாதவிடாய் கால வலியை கட்டுப்படுத்துகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இது இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைத்து தலைவலியை குணப்படுத்த உதவும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து பகலில் பல முறை குடித்து வர தலைவலி குறையும்.

பெருங்காயம் நீண்ட காலமாகவே செரிமானத்திற்கு உதவும் சிறப்பான பொருளாகக் கருதப்படுகிறது. இது இயற்கையாகவே இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகளான வாயு, வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. சமைக்கும் உணவுகளான குழம்பு, பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் வகை உணவுகளில் சிறிது பெருங்காயத்தை சேர்ப்பது அதிக அளவில் கார்போஹைடிரேட் கொண்டிருக்கும் உணவுகளையும் செரிக்க உதவுகிறது. உணவிற்கு பின் ஏற்படும் மந்தத் தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.

பெருங்காயத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மார்பகம் மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் சில புற்றுநோய் செல்கள் வளர்வதையும் பரவுவதையும் பெருங்காயத்தின் பண்புகள் தடுக்கின்றன.

பீனாலிக் அமிலம் மற்றும் டானின்கள் இருப்பதால் பெருங்காயத்தின் சாறில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான தீர்வை வழங்குவதில் முக்கியமான பங்காற்றும்.

தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின் / சைமடின் (Amandatine / Symadine) வைரஸ் மருந்துகளைப் போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் குடலுக்குக் கிடைக்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாய்வு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT