Precautions to prevent diabetes https://tamil.oneindia.com
ஆரோக்கியம்

சர்க்கரை வியாதி வராமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள்!

இந்திராணி தங்கவேல்

வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி வந்து விட்டால் அது பரம்பரையாக தொற்று வியாதி போல் மாறிவிடுகிறது. ஆதலால் அந்த நோய் வராமல் இருக்க நாம் என்னென்ன பாதுகாப்பு செய்துகொள்ள வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

இளம் பருவத்திலிருந்து குறிப்பிட்ட இனிப்பு முதலான எதையும் அதிகமாக உட்கொள்ளாமல் உங்களின் தினசரி உணவுகளில் எல்லா சுவையும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கசப்பு, துவர்ப்பை குறிப்பாக ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.

இளமையிலிருந்தே அமைதியாக சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளை செய்து வரலாம். பள்ளிகளில் கற்றுக்கொடுக்கும் விளையாட்டு பயிற்சிகளை மறக்காமல் அன்றன்று செய்து வந்தாலே உடம்புக்குத் தேவையான அத்தனை பாகங்களிலும் இயக்கம் கிடைக்கும்.

வீட்டிலும், அலுவலகத்திலும் உட்கார்ந்துகொண்டே இருக்காமல் சிறிது நடந்தும், அவசியத் தேவைக்கு மட்டும் வண்டியில் சென்றும், மற்ற நேரங்களில் நடராஜாவாக நடைராணியாகத் திகழலாம்.

பகல் முழுவதும் மட்டுமின்றி, இரவிலும் டென்ஷன் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வந்தால் உடனே விரட்டியுங்கள்.

ஃபாஸ்ட் ஃபுட், பஃபே, ஹோட்டல்களில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்த்து, விருந்துகளிலும் வயிறு முட்ட சாப்பிடுவதை விட்டு, அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணிர், மீதி வெற்றிடம் என்கிற கொள்கையை கடைபிடியுங்கள்.

'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்' என்பார்கள். அதற்கேற்ப உணவை ருசித்து நன்றாக மென்று சாப்பிடுவதுடன், நேரம் தவறாமல் சாப்பிடுங்கள். அதிகமாக சாப்பிடாமல் ஐந்து முறை சாப்பிடுங்கள்.

கோப தாபங்களையும், வீம்புகளையும், ஈகோ, போட்டி, பொறாமைகளையும் விட்டுவிட்டு எங்கேயும் எப்போதும் ரிலாக்ஸ் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள்.

பகலில் தூங்குவதைத் தவிர்த்து, இரவு தூக்கத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். அதற்கு இரவு 7 மணிக்கு மேல் காப்பி, டீ போன்றவற்றைத் தவிர்க்கவும். சூடான பால் அருந்தலாம். அறையின் வெப்பம் மிதமான நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் நெடுநேரம் டிவி பார்ப்பது, உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவதையும் விழிப்பதையும் பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். தூங்கும்போது சுவாசத் தடங்கல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எந்தவிதமான வலியும் தூக்கத்தைக் கெடுக்கும். ஆதலால் உடலில் வலி இல்லாதபடி வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேலாக 40 வயதிற்கு மேல் இரத்த அழுத்தம் சீராக இருக்கிறதா? என மூன்று மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது; சிறுநீரகம் நன்கு செயல்படுகிறதா என்பதையும் கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களாய் இருந்தால், அவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற நோய்கள் வரும்பொழுது, வழக்கமான அளவு உணவு எடுத்துக்கொள்ள முடியாத தருணத்தில், மாத்திரைகளின் அளவை குறைப்பது, நிறுத்துவது போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையை பெற்று செய்வது அவசியம்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருந்தால் நீரிழிவு நோயை வராமல் தடுத்து விடலாம். நமக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையை முடிந்தவரை திருப்தியாக, மகிழ்ச்சியாக அனுபவித்து வாழலாம் என்பது உறுதி.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT