Simple Grandma Remedies 
ஆரோக்கியம்

அவசரத்துக்குக் கைக்கொடுக்கும் சில எளிய பாட்டி வைத்தியக் குறிப்புகள்!

ஆர்.ஜெயலட்சுமி

ன்றாட வாழ்வில் நம் வாழ்வில் ஏற்படும் சில உடல் நலப் பிரச்னைகளுக்கு உடனே ஆங்கில மருந்துகளைத்தான் நாம் நாடுவோம். அவை சில சமயம் நோயை சரி செய்வதற்கு பதில் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தி நமக்கு மேலும் தொந்தரவு தரலாம். ஆனால், நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும், நம் வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை வைத்து சிறு சிறு உடல் நலப் பிரச்னைகளை சரிசெய்துக் கொள்ளலாம். அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* அரை ஸ்பூன் ஓமத்தையும் கால் ஸ்பூன் உப்பையும் தூள் செய்து வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் போதும், அஜீரணம் உடனே நீங்கும். சிறிது நேரத்தில் பசியும் ஏற்படும்.

* குடிக்கும் தண்ணீரில் துளசி இலையை போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாகவும் ஜலதோஷம் வராமலும் இருக்கும்.

* வாடாத பன்னீர் ரோஜா பூவை கைப்பிடி இருவேளை சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு, மூலச்சூடு போன்றவை குணமாகும்.

* கருஞ்சீரகம், ஓமம், கற்பூரம் இவற்றைப் பொடித்து துணியில் கட்டி மூக்கினால் உறிஞ்சினால் ஜலதோஷம் சட்டென்று நீங்கிவிடும்.

* காய்ந்த கறிவேப்பிலை, மிளகு, உப்பு, சுக்கு  முதலியவற்றைக் கலந்து பொடி செய்து சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். பசி நன்றாக எடுக்கும்.

* வேப்பங்கொழுந்து, சர்க்கரை, அதிமதுரம் மூன்றையும் அரைத்து நெய் விட்டு வேக வைத்துக் கொடுக்க குழந்தையின்  மலச்சிக்கல் தீரும்.

* காய்ச்சல், தலைவலி வந்தால் கோதுமை கஞ்சியுடன் பார்லி கலந்து கருவேப்பிலை புதினா சட்னி உடன் பருகி வர காய்ச்சல் தணியும். சளியும் வராது.

* அரிசியுடன் வெந்தயத்தை சேர்த்து கஞ்சி ஆக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

* கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூ, ரோஜா இதழ் சேர்த்து சாப்பிட வாய் மணக்கும். செரிமான சக்தி உண்டாகும்.

* கொதிக்கும் ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலக்கி குடித்தால் வயிற்று வலி பத்தே நிமிடங்களில் குணமாகிவிடும்.

* வெண்டைக்காய் விதையை பார்லி கஞ்சியில் போட்டுக் காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

* மஞ்சள், வசம்பு, மருதாணி இலை, கற்பூரம் இவற்றை சம அளவில் சேர்த்து வைத்து கட்டி வந்தால் கால் ஆணி மறையும்.

* தூதுவளை இலை ஐந்து, மிளகு ஒன்று இரண்டையும் வெறும் வயிற்றில் மென்று பத்து நாட்கள் காலையும் மாலையும் உண்டால் தொடர் தும்மல் நிற்கும்.

* காலில் முள் குத்தி இரத்தக் கசிவு ஏற்பட்டால் உப்பை சுட்டு அதை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் உடனே வலி குறைந்து விடும்.

* புதினா இலை போட்டு கொதிக்க வைத்த நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கொடுத்தால் பித்தம் நீங்கும்.

* உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகளில் தேய்த்து வர கரும்புள்ளிகள் விரைவில் மறைந்து விடும்.

* விளக்கெண்ணையை தினமும் இரவில் புருவங்களில் பூசி வர, புருவம் கருமையாகவும் நன்றாகவும் வளரும்.

இது என்னது, வித்தியாசமான ரெசிபியா இருக்கே? ஆனா செம டேஸ்ட்! 

இந்த மூலிகையைப் பயன்படுத்தினால் உங்க முடியின் ஆரோக்கியம் வேற லெவலுக்கு மாறும்! 

உங்களை நாய் கடித்துவிட்டால் பதற வேண்டாம்… இவற்றை சரியாக செய்தாலே போதும்! 

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மனதுக்கு உற்சாகத்தையும் பாதுகாப்பு உணர்வையும் தரும் மஞ்சள் நிற மகத்துவம்!

SCROLL FOR NEXT